பில்லூர்- சேர்ந்தனூர் இடையே ரூ.8 கோடியில் உயர்மட்ட மேம்பாலம்

மலட்டாற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்க எம் எல். எ அடிக்கல் நாட்டினார்.

Update: 2024-02-17 04:38 GMT

 மேம்பாலம் அமைக்க எம் எல். எ அடிக்கல் நாட்டினார்.

விழுப்புரம் அருகே பில்லூரில் இருந்து சேர்ந்தனூருக்கு இடையே ஓடும் மலட்டாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கப்பட்டு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு பருவமழையின்போதும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது இந்த தரைப்பாலத்தை தண்ணீர் மூழ்கடித்து செல்வதால் பில்லூர், அரசமங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டார 20 கிராமங்களை சேர்ந்த மக்கள், பள்ளி- கல்லூரி மாணவர்கள், பண்ருட்டி, விழுப்புரத்திற்கு செல்ல 10 கி.மீ சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இங்குள்ள மலட்டாற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டுமென 30 ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுவட்டார கிராம மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் மக்களின் தீர்க்கப்படாத 10 கோரிக்கைகள் குறித்து விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.லட்சுமணன், சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென வலியுறுத்தினார். அதனடிப்படையில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்த பிரச்சினையை தீர்க்கும் வகையில் தமிழக அரசு, பில்லூரில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க ரூ.8 கோடியே 38 லட்சத்து 63 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் லட்சுமணன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு மேம்பால பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ம.தி.மு.க. மாநில இலக்கிய அணி செயலாளர் பில்லூர் அன்புகணபதி, கோலியனூர் ஒன்றியக்குழு தலைவர் சச்சிதானந்தம், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் முருகவேல், தெய்வசிகாமணி, ஒன்றிய நிர்வாகிகள் பார்த்தசாரதி, மணிவண்ணன், பழனி, கருணாமூர்த்தி, செல்வக்குமார், முருகன், அய்யப்பன், செல்வி மற்றும் நெடுஞ்சாலை, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News