மரம் முறிந்து விழுந்து வீடு, மின் கம்பங்கள் சேதம்
தேமானூரில் புளிய மரம் முறிந்து விழுந்ததில் மின் கம்பங்கள் மற்றும் வீடு சேதமானது. இதனால் மின் துண்டிப்பு ஏற்பட்டு, போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.;
கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூரிலிருந்து அருமனை செல்லும் முக்கிய சாலையில் தேமானூர் பகுதியில் பழமையான மரங்கள் சாலையோரம் அதிகளவில் உள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அப்பகுதியில் நின்றிருத்த பழமைவாய்ந்த புளியமரத்தில் ஒரு பகுதி திடீரென சாலையின் குறுக்கே முறிந்து விழுந்தது. இதனால் 6 மின்கம்பங்கள் சேதமடைந்து, இப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கபட்டுள்ளது.
இதேபோல் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பகுதி சேதமடைந்தது. எப்போதும் பரபரப்பாக வாகனங்கள் இயங்கி வரும் முக்கிய சாலையில் நள்ளிரவில் மரம் முறிந்து விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக பெரும் உயிர்சேதம் தவிக்கபட்டது. மேலும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் இன்று அதிகாலை வரை முக்கிய சாலையான ஆற்றூர் அருமனை சாலையில் போக்குவரத்து முடங்கியது. தொடர்ந்து குலசேகரம் தீயணைப்புதுறையினர், காவல்துறையினர், மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் மரத்தை வெட்டி அகற்றியதை தொடர்ந்து போக்குவரத்து சீரானது. மேலும் சேதமடைந்த 6 மின் கம்பளையும் அகற்றி, புதிய மின் கம்பங்கள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.