காஞ்சி நகராட்சி திட்டங்கள் அமைச்சர் நேரு துவக்கி வைப்பு

காஞ்சிபுரம் மாநகராட்சியில், பல்வேறு திட்டங்கள் துவக்க விழா நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமை வகித்தார்.

Update: 2024-02-08 08:32 GMT

திறந்து வைத்த அமைச்சர்

காஞ்சிபுரம் மாநகராட்சியில், பல்வேறு திட்டங்கள் துவக்க விழா நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமை வகித்தார். தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர், எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் நேரு மற்றும் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் அமைச்சர் அன்பரசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சியில், பல்வேறு கட்டடங்களுக்கு, அடிக்கல் நாட்டினார். புதிய திட்டங்களின் கல்வெட்டினை இருவரும் திறந்து வைத்தனர். இதையடுத்து, நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் நேரு பேசியதாவது: காஞ்சிபுரம் மாநகராட்சி புதிய கட்டடம் கட்டுவதற்கு, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. காஞ்சிபுரத்திற்கு புதிய பேருந்து நிலையம் விரைவில் அமைக்கப்படும். ஏற்கனவே, பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பாதாள சாக்கடை திட்டத்திற்கு, 300 கோடி. கூட்டு குடிநீர் திட்டத்திற்கு, 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேகவதி ஆற்றில் கலக்கப்படும் கழிவுநீரை, குழாய்கள் மூலமாக எடுத்து சென்று, நீரை சுத்திகரித்து மீண்டும் நதியில் விடுகின்ற பணியை காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்திடம் முதல்வர் வழங்கி இருக்கிறார்.

இந்த திட்டத்தின் மூலமாக சுத்தமான தண்ணீர் நிலத்தடியில் சேமிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News