லால்குடி அருகே லாரி ஓட்டுநர் கைது
லால்குடி அருகே காட்டூரில் அனுமதியின்றி டாரஸ் லாரியில் மணல் கடத்தி வந்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்;
கோப்பு படம்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே காட்டூர் பகுதியில் டாரஸ் லாரியில் மணல் கடத்தி வருவதாக சிறுமயங்குடி கிராம நிர்வாக அலுவலர் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் காட்டூர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டார்.
அப்போது ஒரு டாரஸ் லாரி வேகமாக வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் லால்குடி அருகே அன்பில் ஜங்கமாராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 38 வயதான தர்மன் என்கின்ற சுரேஷ் லாரி உரிமையாளர் என்றும், பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் ஊத்தங்கரையைச் சேர்ந்த 30 வயதான ஜெகநாதன் லாரி டிரைவர் எனவும் தெரியவந்தது.
இதில் லாரி உரிமையாளர் தர்மன் என்கின்ற சுரேஷ் தப்பி ஓடிவிட்டார். மணல் கடத்தி வந்த டாரஸ் லாரி மற்றும் லாரி டிரைவரை லால்குடி காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் ஒப்படைத்தார். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் குமார் லால்குடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் ஜெகநாதனை கைது செய்தனர்.பின்னர் கடத்தி வந்த 6 யூனிட் மணல் மற்றும் டாரஸ் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.