சேலம் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி

சேலம் மாவட்டத்தில் நாளை முதல் 30-ந்தேதி வரை கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுதப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-09 12:06 GMT
ஆலோசனை கூட்டம்

சேலம் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு 5-ம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடத்துவது தொடர்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் நடந்த கூட்டத்தில் 149 குழுக்கள் மூலம் அனைத்து கால்நடைகளுக்கும் கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பின் கலெக்டர் பிருந்தாதேவி கூறியதாவது,

சேலம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கமும் இணைந்து நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 30-ந் தேதி வரை அனைத்து கால்நடைகளுக்கும் இலவசமாக 5-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது. கோமாரி நோய் இரட்டை குளம்பின கால்நடைகளை தாக்கி காய்ச்சல் மற்றும் கொப்புளங்கள் ஏற்படுத்தும் நச்சுயிரி தொற்று நோய் ஆகும். பண்ணையில் சுகாதாரமற்ற பராமரிப்பு, பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், உமிழ்நீர் மற்றும் பண்ணைக்கழிவுகள் மூலம் இந்நோய் எளிதில் பரவுகிறது. கோமாரி நோயினால் மாடுகளில் சினைபிடிக்காமல் போவது, பால் உற்பத்தி குறைதல், தோல் பொருட்களின் மதிப்பு இறக்கம், எருதுகளின் வேலைதிறன் பாதிப்பு, கன்றுகளில் அதிக இறப்பு ஆகியவை ஏற்பட்டு கால்நடை வளர்ப்போருக்கு பெரும் இழப்பு நேரிடுகிறது.

இக்கொடிய நோயை தடுக்கும் வகையில் கோமாரி நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 6 மாதங்களுக்கு ஒருமுறை அனைத்து மாட்டினம் மற்றும் எருமை இனங்களுக்கு தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் 30-ந் தேதி வரை மாவட்டம் முழுவதும் பிறந்து 4 மாதத்துக்கு மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி பணி நடைபெற உள்ளது. இவ்வாறு கலெக்டர் பிருந்தாதேவி கூறினார்.

Tags:    

Similar News