போக்குவரத்து விதிமீறல்களால் வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-11-17 04:44 GMT

போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

குமாரபாளையம் சேலம் சாலையில் தான் பெரும்பாலான வங்கிகள் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு முன் டூவீலர்களை நிறுத்தி வைக்கிறார்கள். ஒரு நிறுவனத்திற்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்கள் நிறுத்த, போக்குவரத்து இடையூறு இல்லாமல் வாகனங்கள் நிறுத்தும் இடம் ஏற்படுத்தி தரவேண்டும். ஆனால் வங்கி நிர்வாகத்தினர் இது பற்றி சற்றும் கவலை படாமல் உள்ளனர். குறுகிய அளவிலான சாலையில் டூவீலர்கள் அதிகம் நிறுத்தப்படுவதால் வாகனங்கள் செல்ல மிகவும் இடையூறு ஏற்படுகிறது. அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குமாரபாளையம் சேலம் சாலையில் போலீஸ் ஸ்டேஷன் முதல் கத்தேரி பிரிவு சாலை வரை 2 கி.மீ. தூரத்திற்கு சாலையின் நடுவில் டிவைடர்கள் வைக்கப்பட்டுள்ளன. போலீஸ் ஸ்டேஷன், பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு, ராஜம் தியேட்டர் பிரிவு, குளத்துகாடு பாலம், பவர் ஹவுஸ் உள்ளிட்ட இடங்களில் உள்ள டிவைடர்களின் முகப்பில் ஒளிரும் விளக்குகள் இல்லாததால், இரவில் வரும் வாகனங்கள் இந்த டிவைடர்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகி பலரும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். விபத்துக்களை தவிர்த்திடும் வகையில் இந்த டிவைடர்களில் ஒளிரும் விளக்குகள் அமைக்க வேண்டும், என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். இதன் பலனாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் சேலம் சாலை டிவைடர்களில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒளிரும் விளக்குகள் மற்றும் ஒளிரும் தகடுகள் பொருத்தப்பட்டன. விபத்துக்களை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்ட ஒளிரும் போர்டுகளின் மீது கண்ணீர் அஞ்சலி உள்ளிட்ட விளம்பர பிளெக்ஸ் போர்டுகள் வைக்கப்படுகின்றன. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சேலம் சாலையில் உள்ள டிவைடர்களில் விபத்துக்களை தடுக்க ஒளிரும் விளக்குகள், முக்கிய சாலை சந்திப்புகளில் ஒளிரும் தகடுகள் மற்றும் பிரிவு சாலைகளில் பதிக்கும் வகையிலான ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டன. சில நபர்கள் இதன் உபயோகம் தெரியாமல், கண்ணீர் அஞ்சலி உள்ளிட்ட விளம்பர பிளெக்ஸ் பேனர்களை வைக்கிறார்கள். இதனால் விபத்து அபாயம் ஏற்படும் சூழ்நிலை ஏற்படுகிறது. எந்த நோக்கத்திற்காக ஒளிரும் போர்டுகள் வைக்கப்படுகிறது என்பது அறியாமல் அலட்சியப்படுத்தும் நோக்கத்தில் பிற போர்டுகள் வைக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News