சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் சித்திரக்குடியில் கண்டெடுப்பு

சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் சித்திரக்குடியில் கண்டெடுக்கபட்டுள்ளது.

Update: 2024-05-09 13:54 GMT
நந்தி சிலை

தஞ்சாவூரிலிருந்து பூதலூர் செல்லும் சாலையில் 18 கி.மீ. தொலைவில் (பூதலூருக்கு முன்னதாக) அமைந்துள்ள சிற்றூர் சித்திரக்குடி ஆகும்.  இவ்வூரினைச் சார்ந்த முனைவர் சு.சத்தியா என்பவர் தங்களுடைய நிலத்தில் நந்தி ஒன்று பாதி புதைந்த நிலையில் இருப்பதாக அளித்த தகவலின் அடிப்படையில்,

  தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தின் தமிழ்ப் பண்டிதரும், வரலாற்று ஆய்வாளருமான முனைவர் மணி.மாறன், பொந்தியாகுளம் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முனைவர் தில்லை கோவிந்தராஜன், அரசு நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கோ.ஜெயலெட்சுமி ஆகியோர் இப்பகுதியில் கள ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது,

சித்திரக்குடியின் வடபுறத்தே வெண்ணாறு பாய்கிறது. தென்புறம் புதிய கல்லணைக் கால்வாய் அமைந்திருப்பினும், இவ்வூருக்கு நீர்வளம் சேர்ப்பது கச்சமங்கலம் தடுப்பணையில் இருந்து பிரிந்து வரக்கூடிய ஆனந்தக்காவேரி வாய்க்காலே ஆகும். கச்சமங்கலம், மாறனேரி, வெண்டயம்பட்டி போன்ற ஊர்களில் பல்லவர் காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றது.

கி.பி. 7ஆம் நூற்றாண்டில் பல்லவர்களுக்குட்பட்ட முத்தரையர் ஆட்சி செந்தலை எனும் ஊரினைத் தலைமையிடமாகக் கொண்டு நடைபெற்றது. அப்போது இப்பகுதி பல்லவர்கள் ஆட்சிப் பகுதியாகத் திகழ்ந்தது. பின்னர் சோழர்கள் ஆட்சிக்காலத்தில் பாண்டி குலாசனி வளநாட்டு ஏரியூர் நாட்டிற்கு உட்பட்ட பகுதியாகத் திகழ்ந்தது.

சித்திரக்குடியில்  லிங்கத்தடிமேடு என்று அழைக்கப்படும் வயல்வெளியில் பாதி உடல் பூமிக்குள் மறைந்த நிலையில் ஒரு நந்தி இருப்பதைக் காண முடிந்தது. இந்த நந்தியானது கி.பி. 9–10ஆம் நூற்றாண்டினை, அதாவது சோழர் காலத்தைச் சார்ந்ததாகக் காணப்படுகின்றது.  இந்நந்தியின் கழுத்தில் மணிமாலை சிறப்பாக வடிவமைக்கப் பெற்றுள்ளது. திமில் இப்பகுதியிலிருக்கும் காளைக்கு உள்ளது போலவே இருக்கின்றது. மேலும், அங்கிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் செல்லக்கூடிய ஆனந்தக்காவேரி வாய்க்காலின் உட்புறத்து தென்புரக் கரையினை ஓட்டியவாறு தலை மற்றும் ஒரு கை உடைந்த நிலையில், இடுப்புக்குக் கீழாக வாய்க்கால் கரையில் பாதி புதைந்த நிலையில் சுமார் மூன்றடி உயரமுள்ள விஷ்ணு சிற்பம் கண்டறியப்பெற்றது. இவை இரண்டும் சோழர்கள் காலத்திய சிற்பங்களாகும்.  இங்கே ஒரு பெரும் சிவன் கோயில் இருந்து முற்றிலுமாக அழிந்து போயிருக்கக்கூடும். பிற்காலத்தில் இந்த இடத்திற்குச் சற்று அருகில் கோயில் ஒன்று எழுப்பப் பெற்றுள்ளது.  இக்கோயிலின் உள்ளே நுழைந்ததும் முன்பகுதியில் கி.பி. 8ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பல்லவர் கால நந்தி ஒன்று உள்ளது. இந்த நந்தியின் அடி பீடத்தில் பல்லவர் கல்வெட்டு இரண்டு வரி உள்ளது. அதில் ஸ்ரீஏரனக்கன் மங்கல வைருதன் செய்வித்தது என்ற எழுத்துப் பொறிப்பு காணப்படுகிறது.

தஞ்சை மாவட்டத்தில் பல்லவர் கால எழுத்துப் பொறிப்புடன் இருந்து முதன்முதலாகக் கண்டறியப் பெற்றுள்ளது சிறப்பாகும். இவற்றுள் புதிதாக நந்தியுடன் காணப்படும் பல்லவர் கல்வெட்டுச் செய்தியும், சோழர் காலத்திய பாதி புதையுண்டுள்ள நந்தியும், விஷ்ணுவும் புதியதாகக் கண்டறிய முடிந்தது. இக்கோயில் வளாகத்தில் அச்சுதப்ப நாயக்கர் கால கல்வெட்டு ஒன்றும், பிற்காலத்திய கல்வெட்டு ஒன்றும் உள்ளது. 

மேற்கண்ட இரண்டு கல்வெட்டுச் செய்திகளும் மத்திய கல்வெட்டு ஆண்டறிக்கையில் வெளிவந்துள்ளது. இவ்வூர் சோழர்கள் காலத்தில் சிறந்து விளங்கியது. சோழர்களுக்கு முன் ஆட்சி செய்த பல்லவர்கள் காலத்திலும் முக்கியப் பகுதியாக இருந்திருப்பதை அறிய முடிகின்றது" என்று தெரிவித்தனர்.

Tags:    

Similar News