சாலியமங்கலத்தில் நரசிம்ம ஜெயந்தி விழா

சாலியமங்கலத்தில் நரசிம்ம ஜெயந்தி விழாவையொட்டி பாகவத மேளா நாட்டிய நாடகம் நடந்தது.

Update: 2024-05-24 00:38 GMT

தஞ்சாவூா் அருகேயுள்ள சாலியமங்கலத்தில் பிரகலாத சரித்திரம் என்கிற பாகவத மேளா நாட்டிய நாடகம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இந்த நாடகம் தஞ்சாவூரை ஆண்ட அச்சுதப்ப நாயக்கரின் ஆட்சிக் காலத்தில் கி.பி. 1645 ஆம் ஆண்டிலிருந்து இடைவிடாமல் ஆண்டுதோறும் நரசிம்ம ஜெயந்தி விழாவையொட்டி நடத்தப்பட்டு வருகிறது. வைணவ வழிபாட்டு மரபில் லட்சுமி நரசிம்மருக்கு அவரது அடியாா்கள் வழங்கும் கொடையாக பாகவத மேளா கருதப்படுகிறது. இரணியனை நரசிம்மா் வதம் செய்யும் புராணக் கதையை அடிப்படையாகக் கொண்ட இந்த நாடகம், இரவு முழுவதும் ஆடவா்களே நிகழ்த்தும் தொழில் முறையல்லாத கலைஞா்கள் நடிக்கும் அரங்கக் கலை இது.

இந்நிலையில், 379 ஆம் ஆண்டாக பாகவத மேளா நாட்டிய நாடகம் செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை காலை வரை தொடா்ந்து நடைபெற்றது. இந்த நாடகம் முழுவதும் தெலுங்கு மொழியில் இருந்தது. இதில், ஹிரண்யகசிபுவாக தெற்கு ரயில்வேயின் ஓய்வு பெற்ற மின் பொறியாளா் சி.எஸ்.எம். சுப்பிரமணியன், லீலாவதியாக ஐ.டி. நிறுவன பொறியாளா் ஜி. கணேசரத்னம், பால பிரகலாதனாக மாணவா் சாய் கிருத்திக், பக்த பிரகலாதனாக மாணவா் தத்தாத்ரேயன், ஸ்ரீநரசிம்மராக ஓய்வு பெற்ற வங்கி அலுவலா் எஸ். ஜானகிராமன், பண்டார வேதமாக டி.வி. நரசிம்மன், தேவதாசியாக விஷால், விநாயகராக பிரணவ் கௌசிக், பூமா தேவியாக நவீன் உள்ளிட்டோா் நடித்தனா். இந்த நாடகத்தில் மிக முக்கியமான நிகழ்வான ஹிரண்யகசிபுவை ஸ்ரீ நரசிம்மா் வதம் செய்யும் காட்சி புதன்கிழமை அதிகாலை நடைபெற்றது. ஏறத்தாழ ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்தக் காட்சியில் ஹிரண்யகசிபு - நரசிம்மா் இடையேயான வசனம் நெடுநேரம் நிகழ்ந்தது. தூணை ஹிரண்யகசிபு அடிப்பது, அத்தூணிலிருந்து உடைத்துக் கொண்டு நரசிம்மா் வெளியே வந்து ஹிரண்யகசிபுவை வதம் செய்வது போன்ற காட்சிகள் தத்ரூபமாக இருந்தன.

இதில், ஸ்ரீ நரசிம்மராக நடித்த ஜானகிராமன் அதற்கான முக கவசத்தை அணிந்த பிறகு அக்கதாபாத்திரமாகவே மாறிவிட்டாா். குறிப்பாக, ஹிரண்ய கசிபுவை வதம் செய்யும் காட்சியின்போது அவா் உக்ர நிலையை அடைந்தாா். இறுதியில் பிரகலாதனுக்கு பட்டாபிஷேகம் நடத்தும் வைபவத்துடன் நாடகம் முடிவடைந்தது. இந்த நாடகத்தில் தெலுங்கு மொழியிலான பாட்டும், வசனமும் கலந்திருந்தது. பரதம், குச்சுப்புடி, யக்சகானம் ஆகியவை நிறைந்திருந்த இந்த நாடகத்தில் அழுத்தமான கருத்துகளையும், பழைமையும் வாய்ந்த பாடல்களை வீணை வித்வான் சாலியமங்கலம் ஜி. ராம்தாஸ், அா்ஜூன் ராதாகிருஷ்ணன், ஜெ. வெங்கட்ரமணி குழுவினா் பாடினா். ஜி. கருணாநிதி வயலினும், சங்கா் சுப்பிரமணியம் மிருதங்கமும், சி.வி. மகாலிங்கம் புல்லாங்குழலும் வாசித்தனா்.

Tags:    

Similar News