தருமபுரியில் ஆட்சியர் தலைமையில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினவிழா

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினவிழா நடைபெற்றது.

Update: 2024-02-29 02:22 GMT

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினவிழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழா மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி இ.ஆப, அவர்கள் தலைமையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையேற்று பேசும் போது தெரிவித்ததாவது.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் -2019 நுகர்வோர் நலன்களை நன்கு காத்திட வகைசெய்வதற்கும், இந்நோக்கத்திற்காக நுகர்வோர் மன்றங்களை அமைப்பதற்கும், நுகர்வோர் பூசல்கள் மற்றும் அதன் தொடர்பான விசயங்களை தீர்வு செய்வதற்குமான ஓர் சட்டம் ஆகும்.நுகர்வோர்களை பாதுகாக்க மற்றும் நுகர்வோர்களின் உரிமைகளை நிலை நாட்டுவதற்கு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் உதவியாக இருக்கின்றது. பொருட்களை வாங்கி பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு உதவிட நுகர்வோர் பாதுகாப்பு குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. மத்திய நுகர்வோர் பாதுகாப்பு குழு, மாநில நுகர்வோர் பாதுகாப்பு குழுக்கள் மற்றும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு ஆகிய மூன்று வகையான குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. தருமபுரி மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் நுகர்வோர் மன்றங்களை உருவாக்கி நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவதோடு, அவர்களின் மூலமாக மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொது மக்களுக்கு பாதுகாப்பாக, தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்தல், உணவுப் பொருள் தயாரிப்பு தொழிலகங்களில் உணவுப் பொருளின் தயாரிப்பும், தரமும், தற்கால அறிவியல் வளர்ச்சியையொட்டிய உணவுப்பொருள் பதப்படுத்தும் நடைமுறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுதல் ஆகியவை இச்சட்டத்தின் நோக்கமாகும். தருமபுரி மாவட்டத்தின் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் -2019 குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் முழுமையாக பெற வேண்டும்.

பொருட்கள் வாங்குவதில் நுகர்வோர்களாகிய நமக்குரிய உரிமைகளையும். கடமைகளையும், முழுமையாக அதனை அறிந்து அனைவரும் பின்பற்ற வேண்டும். நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மற்றவர்களுக்கும் ஏற்படுத்திட முன்வர வேண்டும். அனைவரும் இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி.இ.ஆ.ப.. அவர்கள் தெரிவித்தார். தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி.இ.ஆ.ப. அவர்கள் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் -2019 நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு குறித்து நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, கவிதைப்போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ. மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும், சிறந்த நுகர்வோர் அமைப்புகளுக்கு, கேடயம் பரிசுகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய அலுவலர்களுக்கும் கேடயங்கள் வழங்கப்பட்டது.

மேலும் நிகழ்ச்சியில் மாவட்ட நியமன அலுவலரால் உணவுப் பாதுகாப்பு தரமுள்ள பொருட்களை வாங்குதல் குறித்தும், உணவின் தரம் கண்டறிவது குறித்து செயல்விளக்கம் மூலம் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஐ.நாசிர் இக்பால், உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் மரு.ஆ.பானுசுஜாதா.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மண்டல மேலாளர் வ.தேன்மொழி, பென்னாகரம் வட்ட நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்க தலைவர் ஆர்.சம்பத்குமார். தனி வட்டாட்சியர் சி.கனிமொழி உட்பட அரசு அலுவலர்கள். நுகர்வோர் தன்னார்வ அமைப்புகள் ஆசிரியர், ஆசிரியைகள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News