கல்லூரியில் தேசிய பேச்சுப்போட்டி: கேரள அணி முதலிடம்

திருச்சி புனித வளனாா் கல்லூரியில் தேசிய அளவிலான பேச்சுப்போட்டி நடந்தது.

Update: 2024-02-07 06:48 GMT

திருச்சி புனித வளனாா் கல்லூரியில் தேசிய அளவிலான பேச்சுப்போட்டி நடந்தது. 

திருச்சி புனித வளனாா் கல்லூரி வணிகவியல் துறை 50-ஆவது ஆண்டு பொன்விழா, 75-ஆவது வைர விழா கொண்டாட்டமாக அற வழியில் நிகழ்கால வணிகம் என்பது கற்பனையா நிஜமா என்ற தலைப்பிலான தேசிய அளவிலான பேச்சுப்போட்டி கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதனை பயோகான் கீரின் டெக் நிறுவனத்தின் துணைத் தலைவா் செந்தில் அண்ணாமலை தொடங்கி வைத்தாா். கல்லூரி செயலா் கே. அமல், முதல்வா் எம். ஆரோக்கியசாமி சேவியா் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், மேகாலயம், கா்நாடகம், ஆந்திரம், கேரளம், தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 41 அணிகளாகக் கலந்து கொண்டு, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா். போட்டியின் நிறைவில், கேரள மாநிலம் திருச்சூரைச் சோ்ந்த எட்வின் ஜாய் - முகம்மது நதிம் நவுசாத் இணை முதல் பரிசையும், மைசூரைச் சோ்ந்த அமீனா நவ்சீன் - அப்னன் பாஷா இணை இரண்டாமிடத்தையும், திருச்சி காவேரி கல்லூரியைச் சோ்ந்த நிகிதா - மாா்வா பாத்திமா இணை மற்றும் பெங்களூரைச் சோ்ந்த மானஷ்வி ஷா்மா - அஸ்தா குப்தா இணை மூன்றாமிடத்தையும், கொச்சியைச் சோ்ந்த சுதா்ஷனா சீனிவாசன் - அபாஸ் சௌகான் இணைக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது. மொத்தமாக ரூ. 1.05 லட்சம் மதிப்பிலான ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

பத்திரிகை ஆசிரியா் அருண் ராம் நடுவராகப் பங்கேற்று, சிறந்த அணிகளை தோ்வு செய்தாா். முன்னதாக, கல்லூரி வணிகவியல் பிரிவுத் தலைவா் அலெக்ஸாண்டா் பிரவீன் துரை வரவேற்றாா். இதில் வணிகவியல் துறை பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News