தஞ்சை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்; ரூ. 9.74 கோடிக்கு தீர்வு

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் ரூ.9.74 கோடி அளவுக்கு தீர்வு காணப்பட்டு, வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது.

Update: 2023-12-11 02:30 GMT
பட்டுக்கோட்டை மக்கள் நீதிமன்றத்தில் ஆணை
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் மாவட்டத்திலுள்ள கீழமை நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை சமரசமாகப் பேசி தீர்வு காண்பதற்காகத் தேசிய அளவிலான சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.  நிகழ்வுக்கு கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி ஜி.சுந்தர்ராஜன் தலைமை வகித்தார். கூடுதல் சார்பு நீதிபதி எம்.முருகன், மூன்றாவது குற்றவியல் நீதிமன்ற நடுவர் சி.பாரதி, வழக்குரைஞர் ஜெ. செந்தில்குமார் ஆகியோர் கொண்ட முதலாவது அமர்வில் உரிமையியல், குற்றவியல், குடும்ப நல வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

சிறப்பு சார்பு நீதிபதி எஸ். தங்கமணி, மாவட்ட உரிமையியல் நீதிபதி வி.கீதா, வழக்குரைஞர் எஸ்.சாரதா ஆகியோர் கொண்ட இரண்டாவது அமர்வில் மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இவற்றுடன் கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருவையாறு ஆகிய வட்டச் சட்டப் பணிகள் குழுவின் அமர்வுகளிலும் விசாரணை நடத்தப்பட்டது. 

இவற்றின் மூலம் மாவட்டத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 643 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 2 ஆயிரத்து 240 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.9 கோடியே 74 லட்சத்து 96 ஆயிரத்து 440 அளவுக்கு இழப்பீடு மற்றும் தீர்வு தொகையாக வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான சி.ஜெயஸ்ரீ, மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சார்பு நீதிபதியுமான எஸ். இந்திராகாந்தி, ஆணைக் குழு நிர்வாக அலுவலர் பி. சந்தோஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News