நாமக்கல் மாவட்டத்தில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு ஒருவர் பலி

நாமக்கல் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் தனியார் உணவகத்தில் இருந்து பார்சல் வாங்கி செல்லப்பட்ட சிக்கன் ரைஸ் சாப்பிட்டு உடல் நலம் பாதிக்கப்பட்ட முதியவர் சண்முகநாதன் (72) உயிரிழப்பு. பார்சல் வாங்கிச் செல்லப்பட்ட பின்பு, அந்த உணவில் பூச்சி மருந்து கலக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Update: 2024-05-03 05:53 GMT

 சிக்கன் ரைஸ் சாப்பிட்டு ஒருவர் பலி

நாமக்கல் பேருந்து நிலையம் எதிரே தனியார் உணவகம் ஒன்றில் நேற்று முன்தினம் எருமப்பட்டி பகுதியைச் சேர்ந்த பகவதி என்ற இளைஞர் 7 சிக்கன் ரைஸ் பார்சல்களை வாங்கிக்கொண்டு தமது குடும்ப உறுப்பினர்களுக்கு அவற்றை சாப்பிடுமாறு வழங்கியுள்ளார். அப்போது அந்த உணவை சாப்பிட்ட, அவரது தாய் நதியா மற்றும் நதியாவின் தந்தை சண்முகநாதன் ஆகியோர் நேற்று(1.5.24) கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டு நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தனர். ஆனால் அதே ஓட்டலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட மற்ற பொதுமக்கள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. முன்னதாக சம்பந்தப்பட்ட உணவகத்தை ஆய்வு செய்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச. உமா அந்த உணவகத்தின்மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் அதனை மூடி சீல் வைத்தார். உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் பொறுத்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், பார்சல் வாங்கி செல்லப்பட்ட சிக்கன் ரைஸ் உணவில் பூச்சி மருந்து கலந்திருப்பது தடவியல் சோதனையில் தெரியவந்துள்ளது என்று கூறுகின்றனர். இந்த நிலையில், இன்று(2.5.24 மாலை) சிகிச்சை பெற்று வந்த முதியவர் சண்முகநாதன் (72) சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இதனையடுத்து நாமக்கல் காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 7 சிக்கன் ரைஸ் உணவு பார்சல்களை வாங்கி சென்ற பகவதி இடமும் தனியார் உணவக உரிமையாளரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த தனியார் உணவகத்தில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட மற்ற யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கிச் சென்று அதன் பின்னர் அந்த உணவில் பூச்சி மருந்து கலக்கப்பட்டதா? என்ற கோணத்திலும் நாமக்கல் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News