மயானத்திற்கு பாதை வசதி - மக்கள் அவதி

மயானத்திற்கு செல்ல பாதை வசதியின்றி கிராம மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

Update: 2024-06-25 15:35 GMT
மயானத்திற்கு பாதை வசதி சிரமப்படும் கிராமம்

. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாப்பாக்குடி கிராமத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் இறந்தவர்களின் உடலை மயானத்திற்கு கொண்டு செல்வதற்கு முறையான சாலை வசதி இல்லாததால் கரடு முரடான விளைநில பாதையில் கொண்டு செல்லும் அவலம் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் இக்கிராமத்தைச் சேர்ந்த (70) வயதான கருப்பையா வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். இவரது உடலை கடும் சிரமத்துடன் வயல்வெளிகளை மரம் செடி கொடிகள் ஆகியவற்றை கடந்து சுடுகாட்டிற்கு கொண்டு சென்று அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் உடலை தகனம் செய்தனர். இதனால் கிராமத்தில் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய உடன் வரும் உறவினர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகவதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றன.

இதுகுறித்து பேசிய கிராமத்தைச் சேர்ந்த சண்முகராஜ், எங்களது பாப்பாக்குடி கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கிட்டத்தட்ட சுமார் 60 ஆண்டுகளாக சுடுகாடு இருக்கிறது. சுடுகாட்டிற்கு செல்லக்கூடிய சாலை வசதி இல்லாமல் இருந்து வருகிறோம். மழை நேரத்தில் உயிரிழந்தவர்களின் உடலை கொண்டு வருவதில் பெரும் சிக்கல் நீடித்து வருகிறது. மயானத்திற்கு செல்ல சாலை வசதி ஏற்பட்டு தர வேண்டுமென ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே மாவட்ட மற்றும் ஊராட்சி நிர்வாகம் சாலை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News