பா.ஜனதா பெண் பிரமுகருக்கு பேஸ்புக்கில் ஆபாச வார்த்தைகள் போலீசார் நடவடிக்கை !

சேலம் அருகே பா.ஜனதா பெண் பிரமுகருக்கு பேஸ்புக்கில் ஆபாச வார்த்தைகள் அனுப்பிய மளிகை கடைக்காரர் சைபர் கிரைம் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2024-07-13 07:12 GMT

கைது

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பகுதியை சேர்ந்த பா.ஜனதா பெண் பிரமுகர் ஒருவர் கடந்த மே மாதம் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதில், தனது பேஸ்புக் கணக்கிற்கு ஆபாச வார்த்தைகள் அடங்கிய குறுந்தகவல் வந்தது. தொடர்ந்து இதுபோன்ற வார்த்தைகள் அடங்கிய குறுந்தகவல் வந்ததால் மன உளைச்சல் அடைந்தேன்.

எனவே பேஸ்புக் கணக்கிற்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அந்த பெண்ணின் பேஸ்புக் கணக்கிற்கு ஆபாச வார்த்தைகள் அனுப்பியது கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள பெரியவிளை பகுதியை சேர்ந்த சபரீஸ்குமார் (வயது 45) என்பதும், மளிகை கடை நடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று சபரீஸ்குமாரை கைது செய்து நேற்று சேலம் அழைத்து வந்து விசாரித்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், கைது செய்யப்பட்ட சபரீஸ்குமார் பெண்கள் பெயரில் பல போலி கணக்குகளை உருவாக்கி ஏராளமான பெண்களுக்கு ஆபாச புகைப்படம், வீடியோ மற்றும் ஆபாச வார்த்தைகள் அனுப்பி உள்ளார்.

மேலும் அவர் வேறு ஏதாவது மோசடி புகாரில் சிக்கி உள்ளாரா? என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர். இதையடுத்து சபரீஸ்குமாரை சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News