செங்கல்பட்டு அருகே உயர்மட்ட பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

செங்கல்பட்டு அருகே உயர்மட்ட பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-07-01 14:35 GMT

பாலம் அமைக்க கோரிக்கை 

செங்கல்பட்டு மாவட்டம்,மண்ணிவாக்கம் அடுத்த ஆதனுாரில் துவங்கும் அடையாறு ஆறு, முடிச்சூர், வரதராஜபுரம், பொழிச்சலுார் வழியாக, சென்னை பட்டினம்பாக்கம் அருகே கடலில் கலக்கிறது. பம்மல் அடுத்த பொழிச்சலுாரில், அடையாற்றின் மேல், தற்காலிக மண் சாலை அமைக்கப்பட்டு உள்ளது.

கெருகம்பாக்கம், தரப்பாக்கம், போரூர், குன்றத்துார் பகுதிகளுக்கு, இவ்வழியாக எளிதாக செல்லலாம். இப்பகுதிகளில் தனியார் பள்ளிகள் அதிகம் உள்ளன. இவற்றில், அனகாபுத்துார், பம்மல், பொழிச்சலுார் பகுதிகளைச் சேர்ந்த மாணவ - மாணவியர் பயில்கின்றனர். அவர்கள், பள்ளிக்கு செல்ல வேண்டும் எனில், 10 கி.மீ., துாரம் சுற்றிச்செல்ல வேண்டியுள்ளது. அதேநேரத்தில், பொழிச்சலுார் அருகே அடையாறு ஆற்றை கடந்தால்,

விரைவாக சென்று விடலாம். இதனால், ஏராளமான பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் பொழிச்சலுார் அடையாறு ஆற்றை கடந்து சென்று வருகின்றனர். மக்களுக்கு உதவியாக உள்ள தற்காலிக மண் சாலை, ஒவ்வொரு மழையின்போதும் சேதமடைந்து விடுகிறது.

இதனால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, பல கி.மீ., துாரம் சுற்றிச் செல்லும் நிலைமை ஏற்படுகிறது. சிலர், தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்போதும், ஆபத்தான வகையில் ஆற்றைக் கடந்து செல்கின்றனர். இதனால், பொழிச்சலுார் அடையாறு பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க, பொதுப்பணித் துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News