சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் ரத சப்தமி விழா
விழுப்புரம் மாவட்டம், சிங்கவரம் ரங்கநாதர் கோவில் ரத சப்தமி விழாவில் அமைச்சர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சிங்கவரம் கிராமத்தில் பல்லவர் கால குடவரை கோவிலான ரங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இக்கோவிலில் திருப்பதியில் நடைபெறுவது போன்று ரத சப்தமி விழா வெகுவிரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கோலாகலமாக தொடங்கி யது. விழாவையொட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று பல்வேறு வகையான மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து நாள் முழுவதும் 7 வாகனங்களில் சாமி எழுந்தருளி மாட விதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முன்னதாக காலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளினார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சூரிய பிரபை வாகனத்தை இழுத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்,
நிகழ்ச்சியில் செஞ்சி ஒன்றியக்குழுதலைவர் விஜயகுமார், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், ஊராட்சி மன்ற தலைவர் பராசக்தி தண்டபாணி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் குணசேகரன், அறங்காவலர் குழு உறுப்பினர் சரவணன், ஆர்.கே.ஜி. ரமேஷ், ஸ்ரீராம் ரங்கராஜ், பாலாஜி சுரேஷ், முன்னாள் தலைவர் ரங்கநாதன், மேலாளர் இளங்கீர்த்தி, அய்யப் பன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொணடனர்,
தொடர்ந்து 8 மணிக்கு சேஷ வாகனத்திலும், 10 மணிக்கு கருட சேவை வாகனத்திலும், மதியம் 1 மணிக்கு விசேஷ அலங்கார வாகனத்திலும், மதியம் 2 மணிக்கு அனுமந்த வாகனத்திலும், மாலை 4 மணிக்கு யானை வாகனத்திலும், மாலை 6 மணிக்கு சந் திர பிரபை வாகனத்திலும் ரங்கநாதர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.