பொங்கல் பரிசு பணத்துடன் ரேசன் கடை ஊழியர் தலைமறைவு

கோவை சாய்பாபா காலனியில் பொங்கல் பரிசு பணத்துடன் தலைமறைவான ரேஷன் கடை ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2024-01-22 01:54 GMT

வழக்குப்பதிவு 

கோவை:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் கடந்த 10ம் தேதி முதல் பொதுமக்களுக்கு பொங்கள் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் உள்ள 11 லட்சத்து 4942 ரேஷன் கார்டுகளுக்கு சம்மந்ப்பட்ட ரேசன் கடை ஊழியர்களிடம் பணம் வழங்கப்பட்டு இருந்தது.இதில் 10,31,876 கார்டுகளுக்கு பணம் கொடுக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 73 ஆயிரத்து 66 கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்கப்படவில்லை.

இந்நிலையில் அந்தந்த ரேஷன் கடை பொறுப்பாளர்கள் மீதமுள்ள தொகையை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். ஆனால் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள அமுதம் அங்காடி என்ற ரேஷன் கடை ஊழியர் மதியரசு என்பவர் பொங்கல் பரிசு தொகை பணத்தை திரும்ப செலுத்தாதது தெரியவந்தது.இது குறித்து அமுதம் அங்காடியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது 841 குடும்ப அட்டைதாரர்களுக்கு பணம் வழங்கப்பட்ட நிலையில் 719 பேருக்கு முறையாக பணத்தை கொடுத்து இருப்பதும் 122 பேருக்கு பொங்கல் பரிசு தொகை வாங்காமல் இருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து ஒரு லட்சத்து 22,000 ரூபாய் பணத்தை திரும்ப ஒப்படைக்குமாறு அதிகாரிகள் தெரிவித்த நிலையில் ஊழியர் மதியரசு பணத்துடன் தலைமறைவானார். இது குறித்து கடை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் அளித்த புகாரின் பேரில் மதியரசு மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரைத் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News