சத்தியமங்கலம் : திருமணத்தடை நீக்கும், சுயம்வரா பார்வதி யாகம்

சத்தியமங்கலம் அருகே கெம்பநாயக்கன்பாளையம் பாலதண்டாயுதபாணி கோவில் திருமணத்தடை நீக்கும், சுயம்வரா பார்வதி யாகம் இன்று நடந்தது.

Update: 2024-06-09 08:34 GMT

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே, கெம்பநாயக்கன்பாளையம், டேம் ரோட்டில், பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும், வைகாசி மாதத்தில் இலவசமாக திருமணத்தடை நீக்கும் சுயம்வரா பார்வதி யாகம் நடப்பது வழக்கம்.

தொடர்ந்து 28வது ஆண்டாக இன்று காலை, கணபதி ஹோமத்துடன் யாகம் துவங்கியது. பார்வதியாகத்தில் காலபைரவர் வழிபாடு, சகல தோஷங்கள் நீங்க, பதிக பூஜையும், பார்வதி பரமேஸ்வரன் திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது. இந்த யாகத்தில் , திருமணமாகாத ஆண்கள், பெண்கள், கலந்து கொள்வதால் நவகிரக தோஷம், மாங்கல்ய தோஷம், களஸ்திர தோஷம், செவ்வாய்தோஷம், ருது தோஷம், நாக தோஷம், முன்னோர்கள் சாபம், பரம்பரை பழி பாவங்கள் உள்பட அனைத்து விதமான தோஷ கிரஹம் விலகி, உடனடியாக திருமணம் நடக்கும். என்பது ஐதீகம்.

மேலும், திருமணத்தடை நீக்கும் திருத்தலங்களான திருமணஞ்சேரி, காளஹஸ்தி, பவானி கூடுதுறை, கொடுமுடி உள்ளிட்ட இடங்களில் செய்யும் பூஜை வழிபாடுகள், கிரஹ தோஷ நிவர்த்திகள் இங்கு செய்யப்பட்டன. யாகத்தில் உள்ளுர், வெளியூர்களில் இருந்து திருமணம் ஆகாத ஆண்கள், பெண்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். யாகத்தில் கலந்து கொள்ள வருபர்களின் வசதிக்காக சத்தி, கோபியில் இருந்து கோவிலுக்கு செல்ல, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

Tags:    

Similar News