சேலத்தில் அனல் வெயில் : 108.2 டிகிரி வெப்பம் பதிவு

சேலத்தில் வழக்கத்தை விட வெயில் கொளுத்தி எடுத்தது. நேற்று 108.2 டிகிரி வெப்பம் பதிவான நிலையில் சுட்டெரிக்கும் அனல் வெயிலால் ஏற்பட்ட வெப்ப அலையில் சிக்கி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

Update: 2024-04-24 03:26 GMT

குடையுடன் பயணிக்கும் வாகன ஓட்டிகள்

 சேலம் மாவட்டம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் தினமும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. காலை 9 மணிக்கெல்லாம் அதிகம் வெயில் கொளுத்துகிறது. இதனால் அரசு, தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்பவர்கள், கூலி வேலைக்கு செல்பவர்கள், கடைகள், மார்க்கெட்டிற்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும் வெயில் தாக்கத்தால் அவதிப்படுகின்றனர். மேலும் மதிய நேரங்களில் சாலையில் மக்கள் நடமாட்டம் என்பது குறைவாக காணப்படுகிறது.

பல இடங்களில் அனல் காற்று வீசுகிறது. இதனால் சாலையில் செல்பவர்கள் வெப்ப சலனத்தில் சிக்கி பெரும் சிரமப்படுகின்றனர். இந்த நிலையில் மேலும் சில நாட்கள் வெயில் வாட்டி வதைக்கும் என்று வானிலை மையம் அறிவித்து உள்ளது. அதன்படி சேலத்தில் நேற்று 108.2 டிகிரி வெயில் அடித்தது. இதனால் சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று அனல் காற்றுடன் வெப்ப அலை வீசியது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வெளியில் செல்ல முடியாமல் தவித்தனர். வெப்ப அலையில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வாகன ஓட்டிகள் பலர் தங்கள் வாகனத்தின் பின் இருக்கையில் இருப்பவர்கள் மூலம் குடை பிடித்தபடி சென்றனர்.

Tags:    

Similar News