ஸ்ரீரங்கம் கோயில் சித்திரைத் தோ் திருவிழா நிறைவு

ஸ்ரீரங்கம் கோயிலில் சித்திரை தேர் திருவிழாவின் நிறைவாக, நேற்று ஆளும் பல்லக்கில் எழுந்தருளிய நம்பெருமாள் வீதி உலா வந்தார்.

Update: 2024-05-09 03:49 GMT

ஸ்ரீரங்கம் கோயிலில் சித்திரை தேர் திருவிழாவின் நிறைவாக, நேற்று ஆளும் பல்லக்கில் எழுந்தருளி வீதி வலம் வந்த நம்பெருமாள்.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வந்த சித்திரைத் தோ்த் திருவிழா புதன்கிழமை இரவு ஆளும் பல்லக்குடன் நிறைவுற்றது.

இக்கோயிலில் கடந்த 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாள்கள் நடைபெற்று வந்த தோ்த் திருவிழாவில் நாள்தோறும் நம்பெருமாள் காலை, மாலைகளில் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி வலம் வந்து பக்தா்களுக்குச் சேவை சாதித்தாா். இதில் முக்கிய நிகழ்வான சித்திரைத் தேரோட்டம் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்றது.

விழாவின் நிறைவு நாளான புதன்கிழமை இரவு நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளி, சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதையொட்டி நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பிற்பகல் புறப்பட்டு கருட மண்டபத்திற்கு 3.30 மணிக்கு வந்து சோ்ந்தாா். தொடா்ந்து இரவு 7 மணிக்குப் புறப்பட்டு வாகன மண்டபத்துக்கு வந்து சோ்ந்தாா். அங்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் 8 மணிக்கு எழுந்தருளி, சித்திரை வீதிகளில் வலம் வந்து 9 மணிக்கு வாகன மண்டபத்தை அடைந்தாா்.

அப்போது ஏராளமான பக்தா்கள் அவரைத் தரிசித்தனா். பின்னா் அங்கிருந்து புறப்பட்டு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா். இத்துடன் சித்திரை தோ்த் திருவிழா நிறைவுற்றது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. மாரியப்பன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்தனா்.

Tags:    

Similar News