‘கண்டா வரச் சொல்லுங்க’ போஸ்டரால் பரபரப்பு
தொகுதி பக்கமே வராத எம்பிக்களை “கண்டா வரச் சொல்லுங்க என திருச்சியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஒருபுறம் தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுவரும் நிலையில், மறுபுறம் போஸ்டர் யுத்தம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில், தொகுதி பக்கமே வராத எம்பிக்களை “கண்டா வரச் சொல்லுங்க என திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. எம்பிக்களின் அலுவலக சுவர்களிலும் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
இதனை அதிமுகவினர் தான் செய்திருப்பார்கள் என கருதிய திமுக இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘பதவிக்காக மாநில உரிமைகளை அடகு வைத்த அடிமைகளை கண்டா வர சொல்லுங்க’ என போஸ்டர் அச்சடித்து தமிழகம் முழுவதும் ஒட்டி உள்ளனர். சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பட்டு வருகிறது. திமுகவினர் ஒட்டி உள்ள போஸ்டரில், பதவிக்காக மாநில உரிமைகளை அடகு வைத்த அடிமைகளை கண்டா வர சொல்லுங்க’ எனவும், ‘நாடாளுமன்றத் தேர்தலுக்கு அதிமுகவுடன் கூட்டணி வைக்க கட்சிகள் தேவை.. கண்டா வர சொல்லுங்க’ என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.