வீடு கட்டித்தர முன்வந்த தமிழக முதல்வருக்கு நன்றி:பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை

வீடு கட்டித்தர முன்வந்த தமிழக முதல்வருக்கு நன்றி என பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-09 14:11 GMT

ஆணையை வழங்கிய அதிகாரிகள்

  'தன்னுடைய நீண்டநாள் கோரிக்கையை ஊடகத்தின் வாயிலாக வெளிக் கொண்டு வந்ததால் தமிழக முதல்வர் ஸ்டாலின் விரைவாக நடவடிக்கை மேற்கொண்டு வீடு ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்காக தமிழக முதல்வருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்'

என பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை பேட்டி. மதுரை மாவட்டம் அழகர்கோவில் செல்லும் சாலையில் அப்பன்திருப்பதிக்கு அருகே அமைந்துள்ள பில்லுசேரி எனும் சிறிய கிராமம். இந்தப் பகுதி மக்களின் வேளாண் பணிகளில் கொத்துத் தலைவியாகச் செயல்பட்டு, களஞ்சியம் சுயஉதவிக்குழுக்களின் வாயிலாக அடித்தட்டு ஏழை மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர் பெ.சின்னப்பிள்ளை.

இதன் காரணமாக கடந்த 2001-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அன்றைய பிரதமர் வாஜ்பாயி கையால் ஸ்த்ரீ சக்தி புரஸ்கார் எனும் விருதைப் பெற்றதுடன், வாஜ்பாயே மகிழ்ந்து சின்னப்பிளையின் காலில் விழுந்து வாழ்த்துப் பெற்றார். அதன் அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி பொற்கிழி விருதும், 2018-ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி கையால் ஔவையார் விருதும், 2019-ஆம் ஆண்டு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கையால் பத்மஸ்ரீ விருதும் பெற்றார். இந்நிலையில் தனக்கு பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்து, பட்டா வழங்கப்பட்ட நிலையில், இதுவரை வீடு கட்டித் தரப்படவில்லை என்றும்,

இதனால் மருத்துவம், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது என்று ஊடகங்களுக்கு நேர்காணல் அளித்திருந்தார். இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடடினயாக 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் மதுரை-அழகர்கோவில் முதன்மை சாலையில் அப்பன்திருப்பதி அருகேயுள்ள திருவிழான்பட்டி என்ற ஊரில் 1 சென்ட் 380 சதுர அடி நிலத்தை ஒதுக்கீடு செய்து, இந்த மாதமே கட்டுமானப்பணிகள் அனைத்தும் நடைபெறும் எனவும் அறிவிப்புச் செய்திருந்தார்.

முதல்வரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மதுரை கிழக்கு தாசில்தார் பழனிக்குமார், இன்று சின்னப்பிள்ளையை பில்லுசேரியில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து வீடு ஒதுக்கீட்டிற்கான பட்டாவை வழங்கினார். மேலும் தற்போது நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பகுதியில் ஜேசிபி இயந்திரம் கொண்டு சுத்தம் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பத்மஸ்ரீசின்னப்பிள்ளை கூறுகையில், 'எனக்கு என்று சொந்தவீடு எதுவும் கிடையாது. தற்போது என்னுடைய மூத்த மகன் சின்னத்தம்பிக்கு சொந்தமான இந்த வீட்டில்தான் வசித்து வருகிறேன்.

மிகவும் சிரமமான சூழலில் வீடு ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இந்த செய்தியை ஊடகங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.

Tags:    

Similar News