பெண் குழந்தையை 2.5 லட்ச ரூபாய்க்கு விற்ற கும்பல்!

சூலூர் அருகே பெண் குழந்தையை 2.5 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்த வழக்கில் பீகாரை சேர்ந்த தாய்-மகள் உள்ளிட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-06-10 07:53 GMT

கைது செய்யப்பட்ட பூனம் தேவி, அஞ்சலி 

சூலூர் அருகே உள்ள திம்மநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த விவசாயி விஜயனுக்கு திருமணமாகி கடந்த 17 ஆண்டுகளாக குழந்தைகள் இல்லாத நிலையில் சூலூர் அப்பநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் கம்பெனியின் முன்புறமாக ஹோட்டல் கடை நடத்தி வரும் அஞ்சலி,மகேஷ் குமார் தம்பதியினருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.அவரிடம் அஞ்சலி மற்றும் மகேஷ் குமார் தம்பதியினர் தங்கள் வசம் பிறந்து 15 நாட்களில் ஆன பெண் குழந்தை உள்ளது எனவும் அது பீகாரில் இருப்பதால் இரண்டரை லட்சம் பணம் கொடுத்தால் உங்களுடைய பெயருக்கு ஆதார் கார்டுடன் பிறப்புச் சான்றிதழ் உடன் குழந்தையைப் பெற்றுத் தருவதாக கூறி உள்ளனர்.

இதற்கு விவசாயி விஜயன் சம்மதம் தெரிவித்த நிலையில் அஞ்சலி பீகாரில் உள்ள தனது தாயாருக்கு தகவல் அளித்து உள்ளார். பீகாரில் இருந்த அஞ்சலியின் தாயார் பூனம் தேவி மற்றும் அவரது இளைய மகள் மேக குமாரி ஆகியோர் கடந்த 20 தினங்களுக்கு முன் பீகாரில் இருந்து கோவைக்கு வந்தவர்கள் பிறந்து 15 நாட்கள் ஆன பெண் குழந்தையை அஞ்சலி-மகேஷ் குமார் தம்பதியிடம் ஒப்படைத்து உள்ளனர். அந்த பெண் குழந்தையை விவசாயி விஜயன் குடும்பத்தாருக்கு இரண்டரை லட்சம் ரூபாய் விலைக்கு விற்பனை செய்துள்ளனர்.முன் பணமாக ஒரு லட்சத்து 80 ஆயிரம் பணம் பெற்ற இருந்த நிலையில் 70 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டி இருந்தது

. இந்நிலையில் குழந்தை விற்பனை தொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் சைல்ட்லைன் அமைப்பிற்கு தகவல் கொடுத்து உள்ளார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சைல்ட் லைன் அமைப்பினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் குழந்தை கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்தனர். குழந்தை விற்பனையை உறுதி செய்தவர்கள் வாங்கிய நபர் குறித்து தகவல் தெரியாததால் கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உடனடியாக கருமத்தம்பட்டி டி.எஸ்.பி தங்கராமன் தலைமையில் மேற்பார்வையில் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சுமதி தலைமையில் தனிப்படை அமைத்து குழந்தை விற்பனை தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் குழந்தை விற்பனை செய்யப்பட்டது உறுதி செய்யபட்டது.

இதனை தொடர்ந்து ஹோட்டல் கடை நடத்தி வந்த பீகார் தம்பதியினர் அஞ்சலி-மகேஷ்குமாரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் விற்கபட்ட பெண் குழந்தை தவிர்த்து மேலும் ஒரு ஆண் குழந்தையை ஆந்திராவைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் ஒருவருக்கு 5 லட்சம் ரூபாய் விலை பேசியுள்ளது தெரியவந்தது.இரண்டு குழந்தைகளையும் மீட்ட போலீசார் அஞ்சலி-மகேஷ் குமார் தம்பதியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும் தொடர் விசாரணை நடத்தி குழந்தையை வாங்கியதாக ஜிம்மநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த விவசாய விஜயனை கைது செய்து விசாரணை மேற்கொண்டபோது இரண்டரை லட்ச ரூபாய்க்கு குழந்தையை வாங்கியது ஒப்புக் கொண்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த குழந்தை விற்பனை விவகாரத்தில் ஹோட்டல் கடை நடத்தி வந்த அஞ்சலியின் தாயார் பீகாரில் இருந்து குழந்தையை கொண்டு வந்ததை விசாரனையில் அறிந்த போலீசார் அஞ்சலியின் தாயார் பூனம் தேவி மற்றும் அவரது இளைய மகள் மேகா குமாரி ஆகியோரை கோவை வரவழைத்தனர். இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.பீகாரில் ஏழை தம்பதிக்கு ஒருவருக்கு ஏற்கனவே இரண்டு ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்ததாகவும் வளர்க்க முடியாமல் சிரமப்பட்ட அவர்களிடம் பேசி 1,500 ரூபாய் கொடுத்து நாங்கள் வளர்த்திக் கொள்கிறோம் என கூறி அந்த குழந்தையை கோவையில் விற்பனை செய்ததை பூனம் தேவி அவரது இளைய மகள் மேகா குமாரி தெரிவித்துள்ளனர் .

இதனை தொடர்ந்து இருவரையும் கைது செய்த தனிப்படை போலீசார் சூலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.குழந்தை விற்பனை தொடர்பாக இதுவரை ஐந்து பேர் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில் மேலும் விசாரணை நடத்தி வேறு ஏதாவது குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News