இருளர் பழங்குடியினவாசிகள் சுடுகாடு வசதி இல்லாமல் தவிப்பு

காஞ்சிபுரத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருளர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகிறனர்.

Update: 2024-05-06 05:38 GMT

இருளர் பழங்குடியினவாசிகள் சுடுகாடு வசதி இல்லாமல் தவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய இருளர் பழங்குடியின மக்களுக்கு பட்டா வழங்கி, இலவச வீடுகள் வழங்க தமிழக அரசு முடிவு செய்து, 443 பேர் தேர்வு செய்யப்பட்டன. இவர்களுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன் மலையாங்குளம், சிங்காடிவாக்கம், ஊத்துக்காடு, குண்டுகுளம், காட்ராம்பாக்கம் என, ஐந்து இடங்களில், 269 சதுர அடியில், மின் இணைப்பு வசதியுடன், 20 கோடி ரூபாயில் வீடுகள் கட்டி, சமீபத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்டன. சாலை, குடிநீர் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. ஆனால், இருளர் பழங்குடியின மக்களுக்கு சுடுகாடு வசதியில்லாததால், சமீப நாட்களாக மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

காஞ்சிபுரம் அருகேயுள்ள குண்டுகுளம் பகுதியில், அரசு கட்டி கொடுத்த வீடுகளில் வசித்த வசந்தா என்ற பெண் சமீபத்தில் இறந்தார். இவரை, திருப்பருத்திக்குளம் ஊராட்சியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்ய கேட்டுள்ளனர். ஆனால், அங்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அருகேயுள்ள எந்த ஊராட்சியிலும், அடக்கம் செய்ய அனுமதி இல்லாததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. வேறு வழியின்றி, 6 கி.மீ., துாரம் உள்ள தாயார்குளம் சுடுகாட்டில், பெண்ணின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அரசு கட்டிக் கொடுத்துள்ள வீடுகளில் யாரேனும் இறந்தால், அருகில் உள்ள சுடுகாடுகளில் அடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்படும் என்கின்றனர். இருளர் மக்களுக்கு சுடுகாடு வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என, காஞ்சிபுரம் மாவட்ட மலைவாழ் மக்கள் சங்கத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர். அதேபோல, கீழ்கதிர்பூரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கட்டி கொடுத்துள்ள, 2,112 வீடுகளில் வசிப்பவர்களுக்கும், இதே நிலை தான் நீடிக்கிறது.

Tags:    

Similar News