குடையால் முகத்தை மறைத்து இருசக்கர வாகன திருட்டு

குத்தாலம் அருகே குடையால் மறைத்தபடி குடியிருப்புக்குள் புகுந்து, இருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற திருடனை போலீசார் வலைவீசி தேடுகின்றனர்.

Update: 2024-05-23 11:19 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வியாபார செட்டித்தெருவில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் குடியிருப்பவர் சுந்தரம். இவர் வேலைக்கு சென்று விட்டு இரவு குடியிருப்பின் உள்ளே தனது டிவிஎஸ் ஜூபிடர் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார். காலையில் வந்து பார்த்தபோது வண்டி காணாமல் போயிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் குடியிருப்பு வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை சோதனை செய்து பார்த்துள்ளார். அதில், அதிகாலை 3 மணியளவில் குடையால் முகத்தை மறைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த மர்ம நபர் ஒருவர், ஒரே நிமிடத்தில் சுந்தரத்தின் இருசக்கர வாகனத்தை சைடு லாக்கை உடைத்து வண்டியை வெளியே தள்ளி வருகிறார்.

தொடர்ந்து, வெளியில் சென்று ஒரே கிக்கில் வண்டியை ஸ்டார்ட் செய்து புகையாக மறைந்து விடுகிறார். இதில், உள்ளே வரும்போதும் குடையால் மறைத்திருந்ததாலும், வெளியில் செல்லும்போது பின்புறம் மட்டுமே தெரிவதாலும் வண்டியை திருடிச்சென்றது யார் என்பது முகம் தெரியவில்லை. இதையடுத்து குத்தாலம் காவல் நிலையத்தில் சுந்தரம் அளித்த புகாரின்பேரில் அந்த பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி பதிவுகளையும் சேகரித்து குற்றவாளியை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News