தருமபுரி மாவட்டத்தில் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்

தருமபுரி மாவட்டத்தில் வருகின்ற 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.

Update: 2024-06-29 15:18 GMT

மாவட்ட ஆட்சியர் 

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி இஆப., தெரிவித்துள்ளதாவது.தமிழக அரசின் மக்கள் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக குழந்தைகளுக்கு "தேசிய வைட்டமின்-ஏ சத்து குறைபாட்டு நோய்களை தடுக்கும் திட்டத்தின் கீழ் வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம்" ,

தருமபுரி மாவட்டத்தில் 01.07.2024 முதல் 31.07.2024 வரை நடைபெற உள்ளது. இத்திட்டத்தின் கீழ் நமது மாவட்டத்தில் 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள சுமார் 1.31 இலட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்கப்பட உள்ளது. வைட்டமின்-ஏ சத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் உடல், மன வளர்ச்சி மற்றும் புத்திக்கூர்மைக்கும் மிகவும் இன்றியமையாத நுண்சத்து ஆகும்.

மேலும் வைட்டமின்-ஏ சத்து, கண்குருடு ஏற்படாமல் தடுக்க மிகவும் அவசியமான ஒன்றாகும். வைட்டமின்-ஏ திரவம் வழங்குவதனால் எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படாது. இத்திரவம் அனைத்து துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களிலும் 6 முதல் 11 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு 1 மி.லி. அளவும், 12 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 2 மி.லி அளவும் வழங்கப்பட உள்ளது.

பொது மக்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் கொடுத்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி இஆப., தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News