மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டிடப் பணிகள் இனியாவது தொடங்குமா?

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டிடப் பணிகள் இனியாவது தொடங்குமா என எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2023-12-08 14:16 GMT

மதுரை எய்ம்ஸ்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் மண் பரிசோதனை பணிகள் முடியும் தருவாயில் உள்ளது மதுரை தோப்பூர் அருகே அமைய உள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தில் கட்டிடங்கள் கட்டுவதற்கான மண்ணின் உறுதித் தன்மை குறித்து கடந்த ஒரு மாதங்களாக மண் பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அந்தப் பகுதியில் 25 இடங்களில் 30 அடி ஆழத்திற்கு துளையிட்டு மண் பரிசோதிக்கும் பணி நடைபெற்று வருகிறது இந்தப் பணி தற்போது முடியும் தருவாயில் உள்ளது இன்னும் இரண்டு மூன்று நாட்களில் பணிகள் முடிவடைந்து விடும் என்றும் கட்டிடங்கள் கட்டுவதற்கு மண் ஏதுவாக உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர் மேலும் இந்த மண் பரிசோதிக்கும் பணி திருச்சி என் ஐ டி சார்பாக மேற்கொள்ளப்படுகிறது.

இன்னும் இரண்டு இடங்களில் மண் பரிசோதனைக்கு பிறகு கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படும் எனவும் தெரிகிறது மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்தவமனையுடன் அறிவித்த நாட்டின் பிற மருத்துவமனை கட்டுமானப்பணிகள் முடிந்தும், தொடங்கியும் நடக்கும் நிலையில் 2022-ல் திறக்கப்பட வேண்டிய மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை மட்டுமே, பணிகள் எதுவுமே துவங்காமல், பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியதோடு நிற்கிறது. பிரதமர் மோடி, அடிக்கல் நாட்டு விழாவில் 45 மாதங்களில் கட்டுமானப்பணிகள் நிறைவடையும் எனக் கூறிய நிலையில் மதுரை தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ ஒதுக்கிய 224.24 ஏக்கர் இடம் வெறும் பொட்டல்காடாக காட்சி அளிக்கிறது.

அதனால், மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை தமிழக அரசியல் தொடங்கி நாடாளுமன்றம் வரை பேசுபொருளாகி விவாதிக்கப்பட்டது. தற்போது அடிக்கல் நாட்டப்பட்டு 3 ஆண்டுகள் கடந்த நிலையில் சுற்றுச்சுவர் மற்றும் நிர்வாக பணிகளுக்கான அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நான்கரை ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்திடம் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான நிதி கிடைக்கப்பட்டுள்ளதால் 222.47 ஏக்கரில் மதுரை எய்ம்ஸ் கட்டிட பணிகளுக்கான ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இரு கட்டங்களாக பணிகள் நடைபெறும் எனவும், 33 மாதத்தில் பணிகளை முடிப்பதற்கான ஒப்பந்த காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 870 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை சிகிச்சை வளாகம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சைக்கான 30 படுக்கைகளுடன் கூடிய அறை, 150 எம்பிபிஎஸ் மாணாக்கர்கள் செவிலியர்கள் பயிலும் வகையிலான வகுப்பறைகள், அவர்களுக்கான தங்கு விடுதிகள், ஆடிட்டோரியம், உணவகம, மாணவர்களுக்கான தங்கு விடுதிகள், இயக்குனருக்கான தங்கு இல்லம், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், உணவகம், பணியாளர்களுக்கான குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டிட பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது.

கட்டிட பணிகளுக்கான ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் 2026ஆம் ஆண்டுக்குள் பணிகள் முடியும் எனக் கூறிவரும் நிலையில் கட்டிடப் பணிகள் எப்போதும் தொடங்கும் என்பதற்கான கேள்விக்கான விடை மண் பரிசோதனை இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடையும் நிலையில் பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இனியாவது, தென் மாவட்ட மக்களின் உயிர் காக்கும் உயர் சிகிச்சை தர காத்திருக்கும் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் அரசியல் செய்யாமல் விரைவாக கட்டுமானப்பணிகளை தொடங்கி முடிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News