சேலத்தில் பெண்ணை கொன்றவர்க்கு வலை வீச்சு

சேலத்தில் பெண்ணை கொன்று தண்ணீர் தொட்டியில் வீசி‌ சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Update: 2024-03-24 13:25 GMT

பெண் கொலை

சேலம் பெரமனூர் மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (45). இவர் 4 ரோட்டில் உள்ள பிரபல ஜவுளிகடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுகுனவள்ளி (40). இவர்கள் கடந்த 13 ஆண்டுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

முருகேசனுக்கு சொந்த ஊர் கெஜல்நாயக்கன்பட்டி. சுகுனவள்ளி சன்னியாசி குண்டைச்சேர்ந்தவர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் காதலித்து திருமணம் செய்துள்ளனர். குழந்தைகள் இல்லாத நிலையில் கடந்த 5 ஆண்டாகபெரமனூரில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இன்று முருகேசனுக்கு பிறந்தநாள் ஆகும். இதனால் அவர் காலையில் புதிய பேண்ட், சட்டை அணிந்து வேலைக்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் இன்று காலை சுகுனவள்ளி வீட்டின் கதவு திறந்த நிலையில் இருந்தது. ஆனால் அவரின் நடமாட்டம் வெளியில் இல்லாத நிலையில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண் சென்று பார்த்த போது வீட்டிற்குள் ரத்தக்கறைகள் இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், முருகேசனை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் பதறியடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்தார். வீட்டிற்குள் உள்ள தரைமட்ட தண்ணீர் தொட்டியின் மூடியை திறந்து பார்த்த போது சுகுனவள்ளி ரத்த வெள்ளத்தில் பிணமாக மிதந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பள்ளப்பட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டனர். இதில் சுகுனவள்ளியின் தலையில் பலத்த காயங்கள் இருந்தன. இதனால் அவரை. அடித்துக்கொலை செய்து தண்ணீர் தொட்டிக்குள் வீசியது தெரிய வந்தது. இதையடுத்து உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த போலீசார் இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.

சுகுனவள்ளிக்கு ஒருவருடன் தகாத உறவு இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் தகாத உறவு காதலன் அவரை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் மற்றும் முருகேசனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News