ADMK?? DMK??.. கூட்டணி குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட பிரேமலதா!!

ADMK?? DMK??.. கூட்டணி குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட பிரேமலதா!!;

Update: 2026-01-25 04:43 GMT

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேமுதிக எந்த கூட்டணியில் இடம்பெறும் என்ற முடிவு விரைவில் எடுக்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ஒரு அம்மாவாக தேமுதிகவுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தனக்குத் தெரியும் என்றும், என்டிஏ கூட்டணி உட்பட எந்தக் கூட்டணியும் இன்னும் இறுதி வடிவம் பெறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் நிறைய நேரம் இருப்பதாகவும், பிப்ரவரி 20ஆம் தேதிக்குப் பின்னரே தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தேமுதிக தங்கள் குழந்தை என்றும், உரிய நேரத்தில் நல்ல முடிவெடுத்து கூட்டணியை அமைப்போம் என்றும் அவர் கூறினார். எந்த ரகசியமும் இல்லை என்றும், இம்முறை வெளிப்படையாகவே கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement

சமீபத்தில் நடைபெற்ற என்டிஏ கூட்டணியின் முதல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். ஆனால், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதில் பங்கேற்கவில்லை. இது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. லோக்சபா தேர்தலின் போது எடப்பாடி பழனிசாமிக்கு உறுதுணையாக இருந்த பிரேமலதா, ராஜ்யசபா சீட் விவகாரத்தில் அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அவர் கூட்டணியில் இணைவதற்கான தனது கோரிக்கைகளை அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.

பாஜக மற்றும் அதிமுக தரப்பில், பிரேமலதாவை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வைக்க கடைசி நேர முயற்சிகள் நடந்தன. ஆனால் அவை பலனளிக்கவில்லை. இதனால், தேமுதிக திமுக கூட்டணி பக்கம் சாய்வதாக வதந்திகள் பரவி வருகின்றன. தேமுதிக தொடங்கப்பட்ட நாளில் இருந்து திமுகவுடன் கூட்டணி வைத்ததில்லை. ஆனால், இம்முறை திமுக கூட்டணியில் இடம்பெறுவதற்கான சிக்னல்களை தேமுதிக காட்டுவதாகக் கூறப்படுகிறது.

தற்போது, தேமுதிக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனால், தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு என்ன என்பது இன்னும் தெளிவாகவில்லை. அரசியலில் எதுவும் நடக்கலாம் என்றும், நல்லதே நடக்கும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். என்டிஏ கூட்டணியிலும் இன்னும் சில கட்சிகள் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

இதே வேளையில் தவெக கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என்று அறிவித்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில் தவெகவுக்கும் செல்லலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். விஜய் கட்சியுடன் இணைந்தால் கூடுதல் தொகுதிகள் கேட்கலாம் என்றும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று கூறியிருப்பதால் அதிகாரத்திலும் பங்கு கேட்கலாம் என்ற முடிவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Similar News