இன்று மாலை மயிலாடுதுறை நீதிமன்றத்தில் வி.சி. தலைவர் தொல்திருமாவளவன் ஆஜராகிறார்

மயிலாடுதுறை நீதிமன்றத்தில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் எம்பி இன்று ஆஜராகிறார்

Update: 2024-08-27 00:06 GMT
:- மயிலாடுதுறையில் மதமாற்ற தடைச்சட்டத்துக்கு எதிராக 2003-ஆம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த காவல்துறையில் அனுமதி பெறப்பட்டது. தொடர்ந்து, மயிலாடுதுறை ரயிலடி பகுதியில் இருந்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் பேரணி நடைபெற்றது. நெ.1 காமராஜர் சாலையில் பேரணி செல்வதற்கு அனுமதி பெறப்பட்டிருந்த நிலையில், பேரணியில் பங்கேற்றவர்கள் நெ.2 காந்திஜி சாலை வழியாக செல்ல முற்பட்டனர். அப்போது, காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால், போலீசாருக்கும், விசிகவினருக்கும் மோதல் உருவாகியது. மேலும், பொதுச் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டது. இதுதொடர்பாக, அப்போதைய மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் மோகனவேல் அளித்த புகாரின்பேரில் பிரிவு 147, 148, 337, 307, பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது. இதுதொடர்பாக, மயிலாடுதுறையில் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு கடந்த மாதம் 31ஆம் தேதி  பி.டி. வாரண்ட் பிறப்பித்து மாவட்ட அமர்வு நீதிபதி விஜயகுமாரி உத்தரவிட்டிருந்தார்.. அதனை தொடர்ந்து இந்த பி.டி. வாரண்ட் உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி விசிக வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், ஆகஸ்ட் 27 ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் பிடிவாரண்ட் உத்தரவு திரும்ப பெறப்பட்டது. இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி  இன்று  மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.

Similar News