உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் - ஆட்சியர் தகவல்!
"உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ் தூத்துக்குடி வட்டத்திற்குட்பட்டகுறுவட்டங்களில் வருகின்ற வருகிற 6ஆம் தேதி வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் அடங்கிய குழு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறவுள்ளார்கள்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழக முதல்வர் மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வந்து செயலாற்றும் வகையில் அறிவித்துள்ள "உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் தூத்துக்குடி வட்டத்தில் 18.09.2024 அன்று ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள உள்ளார். இத்திட்ட நடைமுறைகளின்படி பொதுமக்களிடமிருந்து, கோரிக்கை மனுக்களை வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் அடங்கிய குழுவினர் 06.09.2024 (வெள்ளிக்கிழமை) அன்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை தூத்துக்குடி குறுவட்டத்தில் மீளவிட்டான் பகுதி -1 கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்திலும், புதுக்கோட்டை குறுவட்டத்தில், முள்ளக்காடு பகுதி - 2 கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்திலும், கீழத்தட்டப்பாறை குறுவட்டத்தில், கீழத்தட்டப்பாறை பஞ்சாயத்து அலுவலகத்திலும், முடிவைத்தானேந்தல் குறுவட்டத்தில் கூட்டுடன்காடு கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்திலும் பெற உள்ளனர். எனவே பொதுமக்கள் மேற்குறிப்பிட்ட இடங்களில் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பலனடையலாம் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.