வேளாண் உட்கட்டமைப்பு நிதி பெற்று பயனடையலாம்: ஆட்சியர் தகவல்

விவசாயிகள் வேளாண் உட்கட்டமைப்பு நிதி பெற்று பயனடையலாம் என்று மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்து உள்ளார்.

Update: 2024-09-04 05:07 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விவசாயிகள் வேளாண் உட்கட்டமைப்பு நிதி பெற்று பயனடையலாம் என்று மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "வேளாண்மை விளைபொருட்களில் அறுவடைக்கு பிந்தைய சேதாரங்களை தவிர்த்து அதிக லாபம் பெற அரசு மூலம் வேளாண் உட்கட்டமைப்பு நிதி வழங்கப்படுகிறது. அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை திட்டங்களான வினியோக தொடர் சேவைகள், கிடங்குகள், சிப்பம் கட்டும் கூடங்கள், ஆய்வுக் கூடங்கள், குளிர்பதன தொடர் சேவைகள், தளவாட வசதிகள், முதன்மை பதப்படுத்தும் மையங்கள், சுத்தம் செய்தல், உலர்த்துதல், வகைப்படுத்துதல், தரம்பிரித்தல், மின்னணு சந்தையுடன் கூடிய வினியோக தொடர், சூரியமின் சக்தியுடன் கூடிய உட்கட்டமைப்பு, பழுக்கவைக்கும் அறைகள் முதலிய வேளாண் உட்கட்டமைப்புகளை ஏற்படுத்த வேளாண் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் வங்கி கடன் பெற்று பயனடையலாம். பெறப்படும் வங்கி கடனுக்கு வேளாண் உட்கட்டமைப்பு திட்டத்தில் 3 சதவீதம் வட்டி சலுகை வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.2 கோடி வரை வங்கி கடன் பெற்று பயனடையலாம். இந்த திட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், சந்தைப்படுத்தல் கூட்டுறவு சங்கங்கள், விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் கூட்டமைப்புகள், சுய உதவிக் குழுக்கள், கூட்டுப் பொறுப்பு குழுக்கள், பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள், வேளாண் தொழில் முனைவோர் மத்திய, மாநில அரசு உதவி பெறும் போது, தனியார் கூட்டு திட்டங்கள், சுய உதவிக் குழுக்கள், தனிப்பட்ட வணிக உரிமையாளர்கள், அரவை உரிமையாளர்கள், ஏற்றுமதியாளர்கள், வர்த்தகர்கள், உணவுபதப்படுத்துவோர் மற்றும் மாநில சேமிப்பு கழகங்கள் ஆகியோர் பயனடையலாம். இந்த திட்டம் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. திட்டம் தொடர்பான தகவல்களுக்கு வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) 90432 86097, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை தூத்துக்குடி வேளாண்மை அலுவலர்கள் 97882 87514 (தூத்துக்குடி), 96557 76826 (கோவில்பட்டி), 94881 02018 (திருச்செந்தூர்) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். ஆதார் எண் வங்கிக் கணக்கு விவரம், வருமான வரிதாக்கல் செய்த விவரம், இட உரிமைக்கான ஆதார ஆவணங்களை வழங்கி எளிய முறையில் இந்த வேளாண் உட்கட்டமைப்பு நிதியையும், 3 சதவீதம் வட்டி சலுகையையும் பெற்று பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Similar News