பெரியகுளம் நகராட்சி நகர் மன்ற தலைவர் வார்டில் சாலையில் பொங்கி செல்லும் பாதாள சாக்கடை நீர்.

பாதாள சாக்கடை

Update: 2024-09-19 06:06 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பெரியகுளம் நகராட்சி நகர் மன்ற தலைவர் வார்டில் சாலையில் பொங்கி செல்லும் பாதாள சாக்கடை நீர். குடியிருப்பு வாசிகள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் தவித்து வரும் அவல நிலை. பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்க பலமுறை புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு. தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுமித்தா சிவக்குமார் பெரியகுளம் நகர் மன்ற தலைவராக பதவியில் உள்ளார். இந்த நிலையில் நகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்யாத நிலையில் ஆங்காங்கே பாதாளை சாக்கடை நீர் காலையும், மாலையும் சாலையில் பொங்கி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதில் குறிப்பாக பெரியகுளம் நகர் மன்ற தலைவரின் 4வது வார்டு பகவதி அம்மன் கோவில் செல்லும் சாலையில் பல நாட்களாக பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை நீக்காததால் சாலையில் சாக்கடை கழிவுநீர் பொங்கி வெளியேறி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு சாலையில் செல்பவர்கள் முகம் சுளித்தவாறு அவல நிலையால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலையும் உருவாகியுள்ளது. மேலும் பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்க பலமுறை பெரியகுளம் நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நகர்மன்ற தலைவரின் வார்டிலேயே இது போன்ற அவல நிலை தொடர்வதாக அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. எனவே பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் சாலையில் பாதாள சாக்கடை கழிவுநீர் பொங்கி செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Similar News