திருச்செந்தூர் தசரா திருவிழா மோதல் ஐந்து பேர் கைது

உலகப்புகழ் பெற்ற குலசேரன்பட்டிணம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் கடற்கரையில் ஜாதி கொடிகளை பிடித்துக்கொண்டு கம்பு , கட்டைகளுடன் மோதலில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2024-10-06 06:38 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி மாவட்டம் குலசேரன்பட்டிணம் முத்தாரம்மன் கோவிலில் புகழ்பெற்ற தசரா திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்து கோவில் கடற்கரையில் புனித தீர்த்தம் எடுத்துச்சென்றனர். அப்போது கடற்கரை பகுதியில் இரு பிரிவினரிடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் சமுதாய கொடிகள் மற்றும் சமுதாய அடையாள உடைகள் அணிந்த சிலர் கம்பு, கட்டைகளுடன் தாக்கிக்கொண்டனர். இந்த வீடியோ காட்சி வெளியாக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில் இந்த மோதலில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம் திருமலைக்கொலுந்துபுரம், மேலப்பாட்டம் பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் மகேஷ், பேச்சிமுத்து, ஆறுமுகக்கனி, சூர்யா, சுடலை உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் மீது பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல், சமுதாய பிரச்சனையை ஏற்படுத்துதல் உள்ளிட்ட வழக்குகளை பதிவுசெய்து குலசேரன்பட்டிணம் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் வீடியோ காட்சியின் ஆதாரத்தின் அடிப்படையில் மேலும் பலர் கைது செய்யப்பட உள்ளதாகவும் , இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது மிக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

Similar News