கொங்கு விடுதலைப் புலிகள் கட்சியின் நூதன ஆர்ப்பாட்டத்தால் பெரும் பரபரப்பு

சட்டவிரோத சாயப்பட்டறைகளை மூட வேண்டும் என நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது;

Update: 2024-12-11 11:53 GMT
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம்  ஈ.ஆர் தியேட்டர், வசந்தா நகர், பெரியார் நகர், காவிரி ஆர்.எஸ். புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் செயல்படும் , சாய ஆலைகளால் கடந்த சில மாதங்களாக, பொதுமக்கள் பல்வேறுகளை இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மேலும் இங்குள்ள 20-க்கும் மேற்பட்ட ஆலைகள், சாய நீரை சுத்திகரிக்கப்படாமல் சாக்கடை கால்வாய் வழியே விடுவதால் நிலத்தடி நீர் மற்றும் காவிரி ஆறு மாசடைந்து தண்ணீரை உபயோகிக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது தொடர்பாக இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறை மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்தும் இதுவரை எந்த சாய பட்டறை ஆலைகள் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.  தொடர்ந்து கோட்டாட்சியர் சுகந்தி தலைமையில் சாயப்பட்டறை உரிமையாளருடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு, சாயப்பட்டறை உரிமையாளர்கள் சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார் . ஆனாலும் அன்று இரவே சாயப்பட்டறை ஆலைகள் சாய தண்ணீரை சுத்திகரிப்பு செய்யாமல் கால்வாயில் கலந்து விட்டனர். இதனைத் தொடர்ந்து கொந்தளிப்பு அடைந்த அப்பகுதி சார்ந்த பொதுமக்கள் மற்றும் பல்வேறு இயக்கங்களை சார்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள்  வசந்த நகர் பேருந்து நிறுத்தம் பகுதியில் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சுத்திகரிக்கப்படாத சாய நீரை அருந்தி கேன்சர் நோயால்  நோயாளி படுக்கையில் இறந்த நிலையில்  படுத்திருப்பது போலவும், பின்னர் பாடை கட்டி சடலத்தை எடுத்துச் செல்வது போல நூதன முறையில் கட்டிலில் படுத்திருந்த இளைஞரை கொண்டு சென்றனர்.  சவம் போல் படுத்து கிடந்த இளைஞர் முன்பு நடனமாடி,சாயக்கழிவு நீர் கலந்த நீரை கீழே கொட்டி  தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர் . இந்த நூதன ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News