பரமத்தி நகருக்குள் வராத பஸ்கள் மீது நடவடிக்கைக்கோரி பொதுமக்கள் மனு.
பரமத்தி நகருக்குள் வராத பஸ்கள் மீது நடவடிக்கைக்கோரி பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.;
பரமத்தி வேலூர்,டிச. 27: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி நகருக்குள் வந்து பயணிகளை ஏற்றி இறக்காமல் பெரும்பாலான அரசு, தனியார் பஸ்கள் புறவழி ரோட்டில், தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்கிறது. இதனால் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், வேலைக்காக வெளியூர் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பொதுமக்களின் தொடர் புகார்களை அடுத்து, நாமக்கல் கலெக்டர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு பரமத்தி நகருக்குள் செல்ல பர்மிட் உள்ள அனைத்து பஸ்களும், கட்டாயமாக ஊருக்குள் சென்று பயணிகளை ஏற்றி இறக்கவேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் அரசு, தனியார் பஸ்கள் அதை கண்டுகொள்ளாமல், பகல் நேரங்களில் ஓரிரு முறை மட்டும் பரமத்தி நகருக்குள் வந்து செல்கிறது. மற்ற நேரங்களில், குறிப்பாக இரவு நேரங்களில் பரமத்தி நகருக்குள் வராமல் புறவழிச்சாலை வழியாக செல்கிறது. பரமத்தி மற்றும் சுற்றுப்பகுதி பொதுமக்கள் சார்பாக, கலெக்டரிடம் வாகன விதிகளின்படி நடவடிக்கை எடுக்க கோரிக்கை மனு அளித்துள்ளனர்.