கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெஞ்சல் புயலால் கடந்த டிச., மாத துவக்கத்தில் கனமழை பெய்தது. தொடர்மழை காரணமாக விளைநிலங்களில் தண்ணீர் தேங்கியதால், பயிர்கள் மூழ்கி சேதமடைந்தன. சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்தார். தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் பயிர் சேத விபரம் கணக்கெடுக்கப்பட்டு, முழு விபரம் தமிழக அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.இந்நிலையில், சேதமடைந்த விளைநிலங்களில் அதிகாரிகள் மீண்டும் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். இதில், ரிஷிவந்தியம், மண்டகப்பாடி, பள்ளிப்பட்டு மற்றும் வேளானந்தல் ஆகிய பகுதிகளில் பயிரிடப்பட்டு சேதமடைந்த உளுந்து, நெல், மக்காச்சோளம், மரவள்ளி பயிரிடப்பட்ட நிலங்களில் கள்ளக்குறிச்சி தனித்துணை ஆட்சியர் குப்புசாமி ஆய்வு செய்து, விவசாயிகளிடம் கேட்டறிந்தார். அப்போது, உதவி இயக்குநர்கள் ஷியாம்சுந்தர் (வேளண்மை), முருகன்(தோட்டக்கலை), துணை வேளாண்மை அலுவலர் ஷாபனா, உதவி வேளண்மை அலுவலர்கள் செந்தில்குமார், வேலு, வி.ஏ.ஓ., ராஜேஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.