தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பேரணி

சிவகங்கை மாவட்டம், தேசிய தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் ‘ஸ்பர்ஷ்’ தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, மற்றும் விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2025-01-30 07:04 GMT
சிவகங்கை மாவட்டம், தேசிய தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, இன்று (30.01.2025) சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் சார்பில் ‘ஸ்பர்ஷ்’ தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அண்ணல் மகாத்மா காந்தியடிகள் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியதுடன், தொடர்ந்து மருத்துவர்கள் மற்றும் துணை செவிலியர் பயிற்சி பள்ளி மாணாக்கர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் கொடியசைத்து துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30-ஆம் தேதி அன்று தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, அண்ணல் மகாத்மாவின் கனவை நனவாக்கும் வகையில் தொழுநோய் இல்லா உலகை உருவாக்கும் விழிப்புணர்வு தினநாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு, இன்றைய தினம் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்,, மருத்துவர்கள் மற்றும் செவிலியர் பயிற்சி பள்ளி மாணாக்கர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தொழுநோய் எவ்வாறு பரவுகிறது என்பதையும், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் எவ்வாறு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதையும், தற்போது நாம் அனைவராலும் ஏற்கப்பட்டுள்ள உறுதிமொழியின் வாயிலாக அறிவோம். கிருமிகள் மூலம் நோய்த்தொற்று பரவுகிறது என்பதை கருத்தில் கொண்டு, பாதுகாப்பான முறையில் இருந்திட போதிய விழிப்புணர்வுகள் மருத்துவத்துறையின் மூலம் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை நாம் அன்புடன் அரணவனைப்பதன் மூலம் அவர்கள் சீரான மனநிலையிலும், இயல்பாக வாழ்வதற்கும் அடிப்படையாக அவை அமைகிறது. இன்றைய மருத்துவ வளர்ச்சியில் நோய் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டால் ஆரம்பகாலத்திலேயே சிகிச்சை மேற்கொள்ளும் பொருட்டு நோய் பரவுதலை கட்டுப்படுத்துவதுடன், அதனை எளிதில் குணப்படுத்துவதற்கான வழிமுறைகளும் தற்போது உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தோல் நோய் உள்ளவர்கள் அல்லது தொழுநோயினால் உடல்குறைபாடு உள்ளவர்கள் மருத்துவர்களின் உரிய ஆலோசனையின்படி முறையான சிகிச்சைகளை மேற்கொண்டு தங்களது உடல்நலத்தினை பேணிக்காத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ‘ஸ்பர்ஷ்’ தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் ஏற்க்கப்பட்டது. மேலும், மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைக்கப்பட்ட தேசிய தொழுநோய் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணியானது, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை பகுதியில் நிறைவடைந்தது. சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சத்தியபாமா, இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) தர்மர், சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் கவிதாராணி(தொழுநோய்பிரிவு), மீனாட்சி (சுகாதாரம்), மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், செவிலியர் பயிற்சி பள்ளி மாணாக்கர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News