தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
மயிலாடுதுறையில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி:- சிவன், பார்வதி மற்றும் எமதர்மன் வேடமணிந்து சாலை பாதுகாப்பு குறித்து இளைஞர்களுக்கு அறிவுரை;
36-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் ஜனவரி மாதம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்ட போக்குவரத்து காவல்துறை, வட்டாரப் போக்குவரத்து துறை சார்பில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் மினி பேருந்து சம்மேளனம் இணைந்து தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. டிஇஎல்சி பள்ளி வளாகத்தில் துவங்கிய பேரணியை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பாலாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில், விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி ஏராளமானோர் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்றனர். இறுதியாக புதிய பேருந்து நிலையத்தில் பேரணி நிறைவடைந்த நிலையில் அங்கு சிவன், பார்வதி மற்றும் எமதர்மன் வேடம் அணிந்து சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நாடகத்தை அரங்கேற்றினர். மேலும் சிவன் வேடம் அணிந்த நபர் இளைஞர்களுக்கு இருசக்கர வாகனத்தில் பாதுகாப்பாக செல்வது குறித்து அறிவுரைகளை வழங்கினார். பின்னர் எமதர்மன் வேடம் அணிந்த நபர் தத்ரூபமாக நடித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்த நிகழ்வில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.