உடுமலை அருகே பரிதாபம்: காதல் மனைவி இறந்த துக்கத்தில் வாலிபர் தற்கொலை ஆஸ்பத்தா
உடுமலை அருகே காதல் மனைவி இறந்த துக்கத்தில் வாலிபர்,அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ராகல்பாவி ஊராட்சிக்கு உட்பட்ட ஆர்.கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் சீத்தா செல்வராஜ் (வயது 34). இவரும் அருகில் உள்ள முக்கோணம் பகுதியைச் சேர்ந்த அபிநயா (27) என்பவரும் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். இவர்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் சீத்தா செல்வராஜும் அபிநயாவும் காதல் திருமணம் செய்து கொண்டனர். அதைத் தொடர்ந்து இருவரும் சீத்தா செல்வராஜின் வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். இந்த தம்பதியினருக்கு சிவிகா (9) என்ற மகளும், சர்வேஷ் (6) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் சீத்தா செல்வராஜுக்கு பட்டுக் கோட்டை அருகே உள்ள தனியார் கோழிப் பண்ணையில் உற்பத்தி மேலாளர் வேலை கிடைத்தது. அதைத் தொடர்ந்து அவர் அங்கு சென்று தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார். மாதத்திற்கு 2 முறை வந்து மனைவி யையும், குழந்தைகளையும் பார்த்து செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இந்த சூழலில் அபிநயா தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டதாக தெரிகிறது. அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக நேற்று முன்தினம் இரவு சீத்தாசெல்வராஜ் பட்டுக்கோட்டையில் இருந்து வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை 6 மணிஅளவில் அபிநயா வீட்டு குளியல் அறையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி தூக்கில் தொங்குவதை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். இதுபற்றி அறிந்ததும் உடுமலை போலீசார் அங்கு சென்று, அபிநயாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தைகளுடன் வந்த சீத்தா செல்வராஜ் மனம் உடைந்தநிலையில் காணப்பட்டார். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் உடுமலை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள மின் மோட்டார் அறையில் சீத்தா செல்வராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்ததும் அங்கு வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றி வேந்தன், இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் திருமணம் செய்த மனைவி தற்கொலை செய்துகொண்ட வேதனையில் கணவனும் சில மணி நேரத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்தது உடுமலை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தாய், தந்தையை இழந்த குழந்தைகள் நிர்க்கதியாக நின்ற நிகழ்வு ஆஸ்பத்திரி வளாகத்தில் கூடியிருந்த பொதுமக்களை கண்கலங்க செய்தது.