உலகிலேயே இந்தியாவில்தான் ஜி.எஸ்.டி. வரி அதிகம் : ஏ.எம்.விக்கிரமராஜா
வணிகர்;
உலகிலேயே இந்தியாவில்தான் ஜிஎஸ்டி வரி அதிகமாக இருக்கிறது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தெரிவித்தார். தஞ்சாவூரில் இப்பேரமைப்பின் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற மாவட்டப் பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சட்டம் என பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால் 4 கட்டங்களாக வரிகளைப் பிரித்து வைத்திருக்கின்றனர். உலகத்திலேயே நம் நாட்டில்தான் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு மிக அதிகமாக இருக்கிறது. ரூ. 1 லட்சம் கோடிக்கு வருமானம் வந்துவிட்டால் அனைத்து வரிகளையும் நிறுத்திவிடுவதாகக் கூறினர். தற்போது ரூ. 2 லட்சம் கோடிக்கும் அதிகமாக வருமானம் வந்துவிட்டதால், கட்டாயம் வரியைக் குறைத்து, அதற்குரிய சட்டத்தையும் எளிமையாக்க வேண்டும். நான்கு கட்டங்களாக இருக்கக்கூடிய வரியை ஒரே வரியாக மாற்ற வேண்டும். அவ்வாறு செய்தால், அனைத்து பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி. வரி செலுத்தி வாங்க வேண்டிய நிலை ஏற்படும். இதன் மூலம் ரூ. 5 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் பேரமைப்பு மே 5 ஆம் தேதி நடத்தவுள்ள மாநில மாநாட்டில் ஆன்லைன் வர்த்தகத்தால் ஏற்படும் பாதிப்பு, கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் பாதிப்பு, வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் காக்கும் சிறப்பு பாதுகாப்பு சட்டம் உள்ளிட்டவை தொடர்பாக வலியுறுத்தப்படவுள்ளன. ஆன்லைன் வர்த்தகத்தால் 27 சதவீதம் வியாபாரத்தை இழந்துள்ளோம். நாடு முழுவதும் 10 கோடி வியாபாரிகள் பாதிக்கப்படுவர் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. நம் நாடு சிறு வியாபாரிகளைச் சார்ந்தது. சிறு வியாபாரிகளைப் பாதுகாக்கத் தவறினால் வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்படும். எனவே, ஆன்லைன் வர்த்தகத்தைத் தடை செய்ய வேண்டும். தஞ்சாவூர் காமராஜர் சந்தையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி, வியாபாரிகளுக்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி, வாடகையை முறைப்படுத்த வேண்டும்" என்றார் விக்கிரமராஜா. இக்கூட்டத்தில் மண்டலத் தலைவர் எல். செந்தில்நாதன், மாவட்டச் செயலர் ஏ.வி.எம். ஆனந்த், மாநகர அமைப்பாளர் ஆர். ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.