சிவன்மலையில் தைப்பூச திருவிழா நிறைவு நாள்
தைப்பூச திருவிழா நிறைவு சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி மலைக்கோவிலுக்கு எழுந்தருளினார்;
காங்கேயத்தை அடுத்த சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோவில் தைப்பூசத் திருவிழாவின் நிறைவு விழா நேற்று மாலை சிறப்பாக நடைபெற்றது. தைப்பூசத் திருவிழா கடந்த 2-ந் தேதி மலை அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 5-ந் தேதி மலைக்கோவில் கொடியேற்றத்திற்கு பின்னர் மலையடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் இருந்து எழுந்தருளிய உற்சவர் 11, 12 மற்றும் 13 தேதிகளில் தேர்த்திருவிழாவை சிறப்பித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த நிலையில் தைப்பூச நிறைவு நாளான நேற்று மாலை மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மலையடிவாரத்தில் நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் இருந்து சுப்பிரமணியசாமி வள்ளி, தெய்வானையுடன் பல்லக்கில் மலைக்கோவிலுக்கு எழுந்தருளினார். இதில் பக்தர்கள் வழி நெடுகிலும் சுவாமிக்கு ஆரத்தி எடுத்து, 1000 தேங்காய்கள் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மலைக்கோவிலில் எழுந்தருளிய உற்சவருக்கு அபிஷேகமும், சிறப்பு வழிபாடும் நடைபெற்றது. இரவு திருவிழா கொடி இறக்குதல், பாலிகை நீர்த்துறை சேர்த்தலுடன் சிவன்மலை முருகன் கோவிலில் தைப்பூச விழா நிறைவு பெற்றது.