நெல்லை-கொல்லம் ரயில்களை மீண்டும் இயக்கக் கோரி எம்எல்ஏ மனு

நெல்லை-கொல்லம் ரயில்களை மீண்டும் இயக்கக் கோரிக்கை;

Update: 2025-02-22 03:51 GMT
தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம், தென்காசி வழியாக இயங்கிய நெல்லை - கொல்லம் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம், தென்காசி எம்எல்ஏ எஸ் பழனி நாடாா் மனு அளித்துள்ளாா். அதன் விவரம்: தென்காசி வழியாக மீட்டா் கேஜ் பாதை அமலில் இருந்த காலத்தில், இயக்கப்பட்ட மிக முக்கிய ரயில் சேவைகளான நெல்லை - கொல்லம் பகல் நேர ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்பது தென்காசி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இந்த ரயில்கள் நெல்லை, தென்காசி, கேரளத்தின் கொல்லம், பத்தனம்திட்டா மாவட்ட மக்களுக்கு உயிா்நாடியாக இருந்து வந்தது. மேலும் அன்றாடம் ரயிலில் பயணிப்போா், கல்வி, வணிகம், மருத்துவம் மற்றும் கலாசார பரிமாற்றங்களுக்கும், தமிழ்நாடு - கேரளம் இடையேயான உறவுகளை வலுப்படுத்தி பொருளாதாரம் மேம்பாடுவதற்கும் நெல்லை - கொல்லம் பகல் நேர ரயில்கள் மிக முக்கிய பங்காற்றின. தற்போது, நெல்லை- கொல்லம் இடையே அகல ரயில் பாதை பணிகளும் மின்மயமாக்கல் 100 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில் அந்த ரயில்களை இயக்குவதில் எந்தத் தடையும் இல்லை. எனவே, தென்காசி மாவட்ட ரயில் பயணிகளின் நலன் கருதி நெல்லை - கொல்லம் இடையே தென்காசி வழியாக 3 இணை ரயில் சேவைகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

Similar News