குமரியில் விழாக்கோலம் பூண்ட சிவாலயங்கள் குமரி மாவட்டம் விளவங்கோடு ,கல்குளம் தாலுகா பகுதிகளில் தொன்மையும் வரலாற்று சிறப்பும் வாய்ந்த 12 சிவ தலங்கள் அமைந்துள்ளது . ஆண்டுதோறும் சிவராத்திரி தினத்தை முன்னிட்டு 12 சிவாலயங்களையும் ஓடி தரிசிக்கும் சிவாலய ஓட்டம் என்ற நிகழ்ச்சி பாம்பரியமாக இங்கு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இது நாட்டில் வேறு எங்கும் இல்லாத சிறப்பு நிகழ்ச்சியாகும். சிவராத்திரிக்கு 7 நாட்களுக்கு முன்பு மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் சிவாலய ஓட்டத்தின் முந்தைய நாளில் ஏகாதசி தீயால் வேக வைக்கும் உணவுகளை உண்ணாமல் நோன்பு இருப்பது வழக்கம். இந்தசிவாலய ஓட்டத்தில் கலந்து கொள்ள கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பிற பகுதி பக்தர்களும், கேரள மாநிலத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கு பெறுவது வழக்கம். இதை தொடர்ந்து இந்த ஆண்டைய சிவாலய ஓட்டம் இன்று முஞ்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து துவங்கியது. ராமாயணம் மகாபாரதம் காவியத்தோடு தொடர்புடைய திருமலை மகாதேவர் கோவிலிலிருந்து காலை முதலே பக்தர்கள் ஓடத் துவங்கினார்கள். சிவாலயம் ஓடும் பக்தர்கள் விசிறி, விபூதி பொட்டலத்துடன், முஞ்சிறையிலிருந்து துவங்கி திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்ப்பரப்பு வீரபத்திரர் கோவில், திருநந்திக்கரை கோவில், பொன்மைனை மகாதேவர் கோவில், பன்னிப்பாகம் கோவில், கல்குளம் நீலகண்டசுவாமி கோவில், மேலாங்கோடு கோவில், திருவிடைக்கோடு சடையப்பர் கோவில், திருவிதாங்கோடு கோவில், திருப்பன்றிகோடு மகாதேவர் கோவில், திருநட்டாலம்சங்கரநாராயணர் கோவில் போன்றவற்றை ஓடியே சென்று பக்தர்கள் தரிசிக்கின்றனர். நட்டாலத்தில் நாளை 26 ம் தேதி இரவு முழுவதும் தூங்கா நோன்பு இருந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.