காஞ்சிபுரத்தில் புதிய தொழில்நுட்பத்தில் விவசாயிகள் ஆர்வம்
கரும்பு சோகையை நிலத்தில் பரப்பி சாகுபடி புதிய தொழில்நுட்பத்தில் விவசாயிகள் ஆர்வம்;
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம்,சாத்தணஞ்சேரி, சீட்டணஞ்சேரி, பினாயூர், கரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், விவசாயிகள் கரும்பு சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பொதுவாக கரும்பு சாகுபடியில், அறுவடைக்குப் பின், நிலத்தில் உள்ள கரும்பு சோகைளை தீயிட்டு எரித்து விட்டு, அதன்பின் நிலத்தை உழுது பண்படுத்தி அடுத்த கட்ட சாகுபடியை தொடர்வது வழக்கம். இந்நிலையில், இப் பகுதிகளைச் சேர்ந்த சில விவசாயிகள், தற்போது நிலத்தில் உள்ள கரும்பு சோகைகளை எரிக்காமல், அச்சோகைகளை நிலம் முழுக்க பரப்பி, நீர் பாய்ச்சி அதன் மீது கரும்பு சாகுபடி செய்வதை கையாள துவங்கி உள்ளனர். இதுகுறித்து, சாத்தணஞ்சேரி பகுதியைச் சேர்ந்த விவசாயி தனபால்கூறியதாவது: நிலத்திலேயே கரும்பு சோகைகளை எரிப்பதால்,நிலத்தில் உள்ள மண் புழுக்கள் மற்றும்நுண்ணுயிர்கள் அழிந்து,மண் வளம் பாதிக்கப்படுகிறது. நிலத்தில் உள்ள சோகைகளை எரிக்காமல் அவற்றை பரப்பி, மக்க செய்து உரமாக்கி கரும்பு சாகுபடி மேற்கொண்டால், மண் வளம் பெருகி மகசூல்அதிகரிக்கும். மேலும், ஈரத் தன்மையை அதிகரிக்கச் செய்து,வறட்சியைப் போக்கும். நிலத்தில் சோகை மக்கி, மண் புழுக்கள் மற்றும்நுண்ணுயிர்கள் பல்கி மண் வளத்தை கூட்டுவதால், இளங்குருத்து புழுக்களையும் கட்டுப்படுத்தமுடிகிறது. இதனால், சோகைகளை எரிக்காமல், நிலத்தில் சோகை பரப்பி மட்க செய்து சாகுபடியை மேற்கொள்கிறோம். இவ்வாறு அவர்கூறினார்.