கடமலைக்குண்டு இரட்டை கொலை வழக்கில் ஒருவர் சரன்
மேலப்பட்டியைச் சேர்ந்த கணேசன் 32, நேற்று ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் நீதித்துறை நடுவர் (பொறுப்பு) ரமேஷ் முன்னிலையில் சரணடைந்தார்;
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு இரட்டை கொலை வழக்கில் மேலப்பட்டியைச் சேர்ந்த கணேசன் 32, ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தார்.கடமலைக்குண்டு அருகே வனப்பகுதியையொட்டிய விவசாய நிலத்தில் பிப்., 26 உடலில் காயங்களுடன் தங்கம்மாளபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் 45, வருஷநாடு வைகைநகரைச் சேர்ந்த கருப்பையா 55, இறந்து கிடந்தனர். உடல்களில் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன. கருப்பையா மகன் சந்திரசேகரன் இறப்பில் மர்மம் உள்ளதாக எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தார்.அப்புகாரில்,''தந்தை பிப்., 25ல் கோவில்பாறைக்கு அருகே உள்ள புஞ்சை தோட்டத்திற்கு சென்றார். வீடு திரும்பவில்லை. தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது உடலில் வெட்டு காயங்களுடன் மணிகண்டன், கருப்பையா இறந்து கிடந்தனர்,'' என தெரிவித்தார். மேலும் அப்பகுதியில் சம்பந்தம் இல்லாத அலைபேசி கிடந்ததாகவும், இறந்தவர்கள் உடலில் வெட்டு காயங்கள் இருப்பதாகவும், மர்ம நபர்கள் கொலை செய்துள்ளதாகவும் தெரிவித்தார். டி.எஸ்.பி.,சண்முகசுந்தரம் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடக்கிறது. இந்நிலையில் கடமலைக்குண்டு மேலப்பட்டியைச் சேர்ந்த கணேசன் 32, நேற்று ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் நீதித்துறை நடுவர் (பொறுப்பு) ரமேஷ் முன்னிலையில் சரணடைந்தார். அவரை மார்ச் 17 வரை நீதிமன்ற காவலில் வைக்க நடுவர் உத்தரவிட்டார். பின் அவர் தேக்கம்பட்டி சிறையில் அடைக்கப்பட்டார்