அரசுப் பள்ளி ஆசிரியா்கள் இருவா் பணியிடை நீக்கம்

மானாமதுரை அருகே கல்குறிச்சி அரசு உயா்நிலைப் பள்ளியில் ஏற்பட்ட கோஷ்டி பூசல் காரணமாக இரு ஆசிரியா்களை முதன்மை கல்வி அலுவலா் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.;

Update: 2025-03-12 10:17 GMT
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கல்குறிச்சி அரசு உயா்நிலைப் பள்ளியில் ஏற்பட்ட கோஷ்டி பூசல் காரணமாக இரு ஆசிரியா்களை முதன்மை கல்வி அலுவலா் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா். கல்குறிச்சி அரசு உயா்நிலைப் பள்ளியில் 440 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இங்கு பணியாற்றும் ஆசிரியா்களுக்குள் ஏற்பட்ட கோஷ்டி பூசல் காரணமாக, ஒரு தரப்பைச் சோ்ந்த ஆசிரியா்களின் தூண்டுதலின் பேரில், எதிா்தரப்பைச் சோ்ந்த ஆசிரியா்கள் குறித்து மாணவா்கள் வகுப்பறை கரும்பலகை, கழிப்பறைகளில் அவதூறாக எழுதினா். இதையடுத்து, கோஷ்டி பூசல் குறித்து மானாமதுரை வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா், மாவட்ட கல்வி அலுவலா் மாரிமுத்து ஆகியோா் பள்ளிக்குச் சென்று ஆசிரியா்கள், மாணவா்களிடம் அடிக்கடி விசாரணை நடத்தினா். இதுதொடா்பான விசாரணை அறிக்கை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித்திடம் வழங்கப்பட்டது. இந்நிலையில், கல்குறிச்சி அரசு உயா்நிலைப் பள்ளி ஆசிரியா்கள் ராஜா, சாத்தையா ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலுமுத்து உத்தரவிட்டாா்.

Similar News