கோவை: தார் ஆலைக்கு எதிர்ப்பு-ஆட்சியரிடம் மனு !
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம், சின்னக்கள்ளிப்பட்டி கிராமம் காடுவாய் கிணற்றில் தனியார் தார் கலவை தயாரிக்கும் ஆலை அமைக்கப்படுவதை எதிர்த்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இணைந்து ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.;
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம், சின்னக்கள்ளிப்பட்டி கிராமம் காடுவாய் கிணற்றில் தனியார் தார் கலவை தயாரிக்கும் ஆலை அமைக்கப்படுவதை எதிர்த்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இணைந்து ஆட்சியரிடம் நேற்று மனு கொடுத்துள்ளனர். இந்த ஆலை, சுமார் 150 ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் 50 குடும்பங்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் அமைக்கப்படுகிறது. இந்த ஆலையிலிருந்து வெளியேறும் புகை மற்றும் மாசினால் விவசாய நிலங்கள், கால்நடைகள், வனவிலங்குகள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த ஆலை நிலத்தடி நீர், காற்று மற்றும் சுற்றுப்புற சூழலை மாசுபடுத்தும் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறுகையில், இந்த தார் ஆலை அமைக்கப்பட்டால், விவசாயம் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். எனவே, இந்த ஆலையை உடனடியாக மூட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவருடன் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பலர் உடன் இருந்தனர்.