ராமநாதபுரம் மீனவர்கள் சிறை பிடிப்பு இலங்கை கடற்படை நடவடிக்கை
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் மூன்று பேர் ஒரு படகுடன் கைது இலங்கை கடற்படை நடவடிக்கை;
ராமநாதபுரம் இலங்கை கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை ஒட்டி கடந்த ஐந்து நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல் இருந்த நிலையில் நேற்று காலை ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 403 மீன்பிடி விசைப்படகுகளில் 2500க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கென்னடி என்பவருக்கு சொந்தமான ஒரு படகையும் அதிலிருந்த சங்கர், அர்ஜுனன், முருகேசன், ஆகிய மூன்று மீனவர்களையும் கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கை கடற்படையின் முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் மூன்று மீனவர்களும் மீன்பிடி விசைப்படகுடன் மயிலட்டி மீன்பிடி துறைமுகத்தில் வைத்து யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க இருப்பதாக இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.