திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம்

திரளான பக்தர்கள் சாமி தரிசனம்;

Update: 2025-03-19 12:49 GMT
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில், சவுரிராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது.இக்கோவில் பற்றி ஆழ்வார்கள் பாடியுள்ளனர். பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில், ஆண்டுதோறும் மாசி மகப் பெருவிழா 15 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான மாசி மகப்பெருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி, தங்க பல்லாக்கு, திருமேனி சேவை, தங்க கருட சேவை மற்றும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து தேரோட்டம், திருப்பட்டினம் கடற்கரையில் சமுத்திர தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. முன்னதாக, காலை பெருமாள் திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர், ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள், பத்மினி நாச்சியார்களுடன், சவுரிராஜப் பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளினார். கோவிலின் எதிரே அமைந்துள்ள நித்திய புஷ்பகரணி திருக்குளத்தில், மூன்று முறை, நூதன பங்களாதெப்பம் என்ற தெப்பம் வலம் வந்தது. தெப்பத்தில், பக்தி பாடல் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் நாதஸ்வர இன்னிசையும் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற தெப்ப உற்சவத்தில், திருமருகல் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருஷ்ணன், செயல் அலுவலர் குணசேகரன், கோவில் தலைமை கணக்கர் உமா மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News